உயர்படிப்பில் நாயகி...படிப்பின் வாசம் உணரா நாயகன் தமிழ்ப்படங்களில் நடக்கும் கலாட்டாக்கள்

Pammal K Sambantham
எப்பவுமே ஆண் தான் எல்லா விதத்திலும் பெரியவனாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவான். பெண் எப்போதும் தனக்குக் கீழ் தான் இருக்க வேண்டும் என்று நினைப்பான். ஆனால் இப்போது காலம் மலையேறி விட்டது. பெரும்பாலான இடங்களில் பெண்களே முன்னிலையில் இருக்கிறார்கள்.
ஆண்கள் அடங்கி ஒடுங்கிப் போய் தான் இருக்கிறார்கள். இதற்கெல்லாம் கல்வி அறிவு தான் காரணம். இதனால் இருவருக்குள்ளும் போட்டோ போட்டியும் அவ்வப்போது நடப்பதுண்டு.
இந்த கலாட்டாக்கள் நிஜத்தில் நடக்கிறதோ இல்லையோ சினிமாவில் அடடா என்று சொல்லும் அளவில் நடந்து ஒவ்வொரு காட்சியும் நம்மை பரவசப்படுத்துகிறது. அந்தக் கலாட்டக்கள் நடக்கும் சில தமிழ்ப்படங்களைப் பார்ப்போம் வாருங்கள்.
படித்தால் மட்டும் போதுமா?

Padithal mattum pothuma
1962ல் வெளியான இந்தப்படத்தில் அண்ணனின் சூழ்ச்சியால் படிக்காத நாயகனுக்கு மிக அதிகமாகப் படித்த பெண் மனைவியாகிறாள். முதரலிரவின் போது தான் தன் கணவன் படிப்பறிவில்லாதவன் எனத் தெரிந்து மனைவி அதிர்கிறாள்.
தன் கணவன் படிக்காதவன் என்பதையும், தன்னிடம் இதையெல்லாம் மறைத்து ஏமாற்றி திருமணம் செய்து கொண்டான் எனவும் நினைத்து அவனோடு வாழ மறுக்கிறாள். பல துன்பம், துயரங்களுக்குப் பிறகு தன் கணவனது அன்பைக் கண்டு அவனோடு ஒன்று சேர்கிறாள்.
இந்தப்படத்தை இயக்கியவர் ஏ.பீம்சிங். எம்.எஸ்.விஸ்வநாதனின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர்ஹிட் ரகங்கள். சிவாஜி, கே.பாலாஜி, சாவித்திரி, ராஜசுலோசனா, எம்.ஆர்.ராதா, ரங்கராவ், கண்ணாம்பா உள்பட பலர் நடித்துள்ளனர்.
ஓகோகோ மனிதர்களே, பொன் ஒன்று கண்டேன், தண்ணிலவு தேனிறைக்க, நான் கவிஞனும் இல்லை ஆகிய பாடல்கள் உள்ளன.
பெரிய இடத்துப் பெண்

Periya idathu penn
படிப்பில் குறைந்த நாயகன், தன்னை விட அதிகம் படித்த நாயகியை திட்டமிட்டு திருமணம் செய்து கொள்கிறான். முதலில் நாயகி காதலை ஏற்க மறுத்தாலும் பிறகு அதை ஏற்றுக்கொள்கிறாள்.
1963ல் வெளியான படம். டி.ஆர்.ரமண்ணா இயக்கியுள்ளார். எம்ஜிஆர், சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா, நாகேஷ், அசோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் இசையில் பாடல்கள் மனதைக் கவ்வுகிறது.
அன்று வந்ததும், அவனுக்கென்ன தூங்கி, கண்ணென்ன கண்ணென்ன, கட்டோடு குழலாட, பாரப்பா பழனியப்பா ஆகிய பாடல்கள் உள்ளன.
இதேபோல தான் பட்டிக்காடா பட்டணமா, சகலகலா வல்லவன் ஆகிய படங்களிலும் கதை பின்னப்பட்டிருக்கும்.
சூர்யவம்சம்

Surya vamsam
1997ல் விக்ரமன் இயக்கத்தில் வெளியான இந்தப்படத்தில் தன்னை விட படிப்பில் குறைந்த நாயகனை அவனது நல்ல மனதிற்காக நாயகி விரும்புகிறாள். பிறகு திருமணமும் செய்து கொள்கிறாள்.
அவனுக்கு ஒரு பக்கபலமாக இருந்து அவன் உயர்வுக்கும் வழிவகுக்கிறாள். கணவனது ஆசைப்படி அவளும் ஐஏஎஸ் படித்து கலெக்டராகிறாள். சரத்குமார், ராதிகா, தேவயானி, மணிவண்ணன், பிரியா ராமன், ஜெய்கணேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாடல்கள் ரசனை. ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ, காதலா காதலா, சலக்கு சலக்கு, நட்சத்திர ஜன்னலில், திருநாளுத் தேரழகா உள்பட பல சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.
பம்மல் கே.சம்பந்தம்
கமல், சிம்ரன் நடிப்பில் உருவான படம் பம்மல் கே.சம்பந்தம். 2002ல் வெளியானது. இப்படத்தில் நாயகி டாக்டர். தன்னை விரும்பிய படிப்பறிவு குறைந்த நாயகனை மணக்கிறார். அவர் பரம்பரை சொத்து அனாதை இல்லத்திற்குப் பயன்பட வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொள்வார்.
மௌலியின் இயக்கத்தில் கமல், சிம்ரனின் அசத்தலான நடிப்பில் வெளியான படம். இதில் கமல் சென்னை பாஷை பேசி கலக்கியிருப்பார். உடன் அப்பாஸ், சினேகா, மணிவண்ணன், ரமேஷ் கண்ணா, வையாபுரி, ஸ்ரீமன், சார்லி உள்பட பலர் நடித்துள்ளனர்.
தேவாவின் இன்னிசையில் சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன. கந்தசாமி மாடசாமி, ஏண்டி சூடாமணி, சகலகலா வல்லவனே, கடோத்கஜா, திண்டுக்கல்லு பூட்ட ஆகிய பாடல்கள் உள்ளன.