சிவாஜியை பார்க்க ரயிலில் அலைமோதிய கூட்டம்... அருமையான பாடல் காட்சி படமானதன் சுவாரஸ்ய பின்னணி...!

Sivaji
சிவாஜிகணேசன் நடித்த படத்தில் அமைதியான நதியினிலே ஓடம் என்று ஆண்டவன் கட்டளை படத்தில் ஒரு இனிமையான பாடல் வரும். இந்தப்பாடலில் சிவாஜியும், தேவிகாவும் நடித்து இருந்தனர். 1964ல் வெளியானது இந்தப் படம். இந்தப் பாடல் காட்சியில் உள்ள அந்த இடமே நமக்கு ஒரு அலாதியான அமைதியைத் தரும். அந்த இடம் எங்குள்ளது என்று தெரியுமா?
பழனிக்கு வடக்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் கோதை மங்கலம் என்ற கிராமத்தில் உள்ளது. அங்குள்ள ஒரு ரயில்வே ஆற்றுப் பாலத்தின் கீழ் தான் இந்தப் பாடல் காட்சி எடுக்கப்பட்டுள்ளது. இப்போது அதே ரயில்வே பாலத்தின் கீழ் உள்ள ஆறு பாசி படர்ந்து காணப்படுகிறது.

Railway bridge
ஆண்டவன் கட்டளை படத்தின் இயக்குனர் கே.சங்கர். இந்தப் படத்தின் மையக்கருவே இந்தப் பாடல் காட்சி தான். அதை வித்தியாசமாக படமாக்க நினைத்தாராம் இயக்குனர். அதனால் சிவாஜி, தேவிகா படகில் பயணம் செய்வது போல எடுத்தனர். அந்தப் படகு ஆற்றில் செல்லும்போது பாலத்தின் மேல் ரயில் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தாராம் இயக்குனர். அதனால் உடுமலைப்பேட்டையில் இருந்து பழனிக்கு வரும் ரயிலின் நேரத்தை அறிந்து கொண்டு, அந்த நேரத்திற்கு அரைமணி நேரம் முன்பாகவே படக்குழு தயாரானது. படகில் சிவாஜியும், தேவிகாவும் தயாராக இருந்தனர்.
ஆற்றின் கிழக்கு கரையில் கேமரா தயார்நிலையில் இருந்தது. அதற்குள் இந்த செய்தி காட்டுத்தீயாகப் பரவ, சிவாஜியைப் பார்க்க கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்துவிட்டது. ரயிலை படமாக்கப் போகிறார்கள் என்று தகவல் தெரிந்து விட்டது. இதற்காகவே பலரும் உடுமலைப்பேட்டைக்கு சென்று, அங்கிருந்து காலை புறப்படும் ரயிலில் ஏறிச் சென்றார்களாம்.
இந்தப் பாடல் காட்சிக்காக கேரளாவில் இருந்து தனிப்படகு வரவழைக்கப்பட்டதாம். கோதைமங்கலம், மடத்துக்குளம், தேக்கடி என பல இடங்களில் இந்தப் பாடல்காட்சி எடுக்கப்பட்டுள்ளது. கவியரசர் கண்ணதாசனின் செதுக்கிய வரிகளில் உருவானது இந்தப் பாடல். இசை அமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன்.