நடிகர் திலகம் சிவாஜிகணேசன் தமிழ் சினிமா உலகின் சிம்ம சொப்பனம். அவர் ஒரு பிரம்மாண்டம். நடிப்பின் அகராதி. இவரது நடிப்பால் தான் பலருக்கும் வரலாறு மற்றும் இதிகாச நாயகர்கள் யார் என்றே தெரியும்.
அவருடைய முகபாவனைகளில் கண் மட்டுமல்ல…அனைத்து உறுப்புகளுமே நடிக்கத் தொடங்கி விடும். நடிப்பை நேசிப்பவர்களுக்கு இது புரியும். வீரபாண்டிய கட்டபொம்மனை பலரும் பார்த்து இருக்க மாட்டார்கள்.
அதே போல கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யையும் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் இருவரையும் தனது படங்களின் வாயிலாக நேரில் பார்த்தது போன்ற பிரமிப்பை ஏற்படுத்தினார் சிவாஜி. அந்தப்படங்கள் எப்படி உருவானது என்பதை இயக்குனர் பி.ஆர்.பந்துலு என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா…
ஒரு நாள் சிவாஜி கணேசன் காரியாலயத்திற்கு வந்தார். அவர் வந்தாலே ஏதாவது ஒரு விசேஷம் இருக்கும். அதுதான் விசேஷமான சேதி. அன்றும் அப்படி ஒரு சேதியுடன் தான் வந்தார்.
கட்டபொம்மன் கதையைப் படமாக்கினால் என்ன? என்று யோசனை சொன்னார்.
அப்போது அவர் கட்டபொம்மன் நாடகத்தை அரங்கேற்றுவதற்கான ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்து கொண்டிருந்தார். சேலத்தில் நாடகத்தின் அரங்கேற்ற தினத்தன்ற போய்ப் பார்த்தோம். நாடகத்தின் அமைப்பே எங்களுக்குப் பிடித்துப் போய்விட்டது. கட்டபொம்மனைப் படமாக்கினோம்.
இந்தப்படம் தாய்நாட்டுக்கு பெரும் பெருமையை கெய்ரோ படவிழாவில் தேடித்தந்தது. உலகத்தின் பல்வேறு நாட்டைச் சேர்ந்த அந்த விழாவில் கட்டபொம்மன் படம் கடைசிநாள் தான் காட்டப்பட இருந்தது.
ஆனால் முதல்நாளே படம் திரையிடப்பட்டு விட்டது. படம் முடிந்ததும் பலரும் சிவாஜியின் திறமையை வெகுவாகப் பாராட்டினர். அவர் இல்லாவிட்டால் நாங்கள் அந்தப்பரிசை நிச்சயம் பெற்றிருக்க முடியாது.
கட்டபொம்மனைத் தொடர்ந்து சபாஷ் மீனா வந்தது. அந்தப்படத்தின் 100வது நாள் விழாவில் நானும் அவரும் காரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது தான் சிவாஜி, கப்பலோட்டிய தமிழன் நடத்தைப் பற்றிப் பேசினார்.
அதனால் நமக்கு லாபம் வந்தாலும் சரி. நஷ்டம் ஏற்பட்டாலும் சரி. அவரது வரலாற்றைப் படம் பிடித்து விடுவோம் என்று சொன்னார் கணேசன்.
அந்த மகான் வ.உ.சி. மகத்தான தியாகங்களைச் செய்து பலவாறு துன்புற்றிருக்கும்போது நாம் இதைச் செய்யக்கூடாதா? வ.உ.சி.யின் படம் வந்ததற்கும் சிவாஜி தான் காரணம். ஒரு நடிகருக்கான இலக்கணம் அனைத்தும் நிரம்பியவர்.
ஒரு உண்மையான நடிகர் யார் என்றால் அவர் சிவாஜி தான். அவரை எப்படி வேண்டுமானாலும் நடிப்பின் மூலம் மாற்ற முடியும். ரப்பர் எப்படி எல்லாம் வளைந்து கொடுக்குமோ அப்படிப்பட்டவர் அவர். எந்தப் பாத்திரத்தைக் கொடுத்தாலும் அதை ஏற்று நடிக்கும் நெளிவு சுளிவுகள் நிரம்பியவர்.
ஏதாவது ஒன்றைச் சொன்னால் போதும். அதைத் திறம்படச் செய்து முடித்து விடுவார். அப்படிப்பட்ட திறமையான நடிகர் யார் என்றால் அவர் தான் தான் சிவாஜி. எதையும் சிறப்புற செய்து முடிக்கும் திறமையைக் கடவுள் அவருக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறார்.
விஜய் ரசிகர்கள்…
Simbu: சிம்புவின்…
விஜய் டிவி…
பத்திரிக்கையாளராக இருந்து…
தமிழ் சினிமாவில்…