சூப்பர்ஸ்டாரின் பாட்ஷா படம் உருவானதன் ரகசியம் இதுதான்...!

Rajnikanth in baatsha
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு மாபெரும் ரசிகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொண்டு இன்று வரை சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் தான் ரஜினிகாந்த். இவரது படங்களில் இவரது ஸ்டைல் தான் முதல் ஹீரோவாக இருக்கும்.
இவரது வேகமான நடை, கை கால் அசைவுகளில் இவர் காட்டும் ஸ்பீடு, வேகமாக பேசும் டயலாக்குகள் என எதிலும் இவரது ஸ்டைல் தனி முத்திரையைப் பதித்து விடும். அதனால் தான் பாட்ஷா படத்தில் கூட ஸ்டைலு ஸ்டைலு தான் சூப்பர் ஸடைலுதான்...இந்த ஸ்டைலுக்கேத்த மன்னன் இவரு தான்....என்ற பாடல் இடம்பெற்றிருக்கும்.

baatsha
ரஜினிகாந்த் தனது ஒட்டுமொத்த ஸ்டைல்களையும் ஒரே படத்தில் கொண்டு வந்தது என்ன படம் என்று கேட்டால் பாட்ஷா என்று உடனடியாக சொல்லிவிடலாம். ரசிகர்கள் மத்தியில் அந்த அளவு பாப்புலரான படம் தான் இந்த பாட்ஷா. அதேபோல் ரஜினியின் திரையுலக பயணத்திலும் இந்த படம் ஒரு மைல் கல் என்று சொன்னால் மிகையில்லை.
தமிழ்சினிமா ரசிகர்கள் யாராக இருந்தாலும் இந்தப்படத்தைப் பார்க்காமல் இருக்க மாட்டார்கள். அனைத்துத் தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொண்டு பெரும் வரவேற்பைக் கொடுத்த படம் இது.
அது சரி. இந்தப்படம் எப்படி உருவானது என்று பார்க்கலாமா...
ரஜினிகாந்த், இந்தி திரை உலக சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சனோடு 1991ல் ஹம் என்ற படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது அந்தக் கதை பற்றிய விவாதத்தின் போது ரஜினியும் உடன் இருந்தார். அந்த விவாதத்தில் அமிதாப்பச்சனின் தம்பி கோவிந்தா போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
அவரது அண்ணன் அமிதாப்பச்சன் போலீஸ் அதிகாரிகளை தனக்கே உரிய ஸ்டைலில் மிரட்டுவது போன்ற காட்சி குறித்து விவாதம் நடந்தது. ஆனால், இந்தப் படத்தில் அந்தக் காட்சி இடம்பெறவில்லை. இந்தக் காட்சியோ ரஜினியின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.
அப்போது தமிழ்சினிமாவில் ரஜினி அண்ணாமலை படத்தில் நடித்துக் கொண்டு இருந்தார். இந்தப்படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. இவரிடம் தனது மனதில் பதிந்த காட்சி குறித்துப் பேசி அதை டெவலப் பண்ணுங்கள் என்று கூறியுள்ளார் ரஜினி. தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த வீரா படத்தின் படப்பிடிப்பில் சுரேஷ்கிருஷ்ணா இந்தக் கதையை முழுவதுமாக உருவாக்கி விட்டார்.

baatsha
இந்தப்படக்கதையின் படி ரஜினி மும்பை டான் வேடத்திலும், மாணிக்கம் என்ற சாதாரண வேடத்திலும் வரும்படி வெவ்வேறு கதைகளாக உருவாக்கி அவற்றை ஒன்றாக்கியுள்ளார் சுரேஷ்கிருஷ்ணா. இந்தப்படத்திற்கான தலைப்பு பாட்ஷா என்று வைத்தது யார் தெரியுமா? ரஜினிகாந்த் தான்.
படத்தில் தீப்பொறி பறக்கும் கதை இருப்பதால் வெயிட்டான வில்லன் வேண்டும் அல்லவா? அதற்கு யாரைப் போடலாம் என்று ஆலோசித்துள்ளனர். முதலில் அமிதாப்பச்சனைக் கேட்டுள்ளனர்.
பின்னர் நடந்த ஆலோசனையில் மார்க் அண்டனி என்ற இந்தக் கதாபாத்திரத்திற்குப் பொருத்தமானவர் ரகுவரன் தான் என்று முடிவு செய்து விட்டனர். படத்தில் அவரது நடிப்பு ரஜினிக்கு இணையாக இருந்ததும் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவதும் நமக்கே தெரியும். 1995ல் வெளியான இப்படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.
இப்படத்திற்கு பாலகுமாரன் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியுடன் நக்மா, சரண்ராஜ், விஜயகுமார், ஆனந்த்ராஜ், ஜனகராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு தேவா இசை அமைத்துள்ளார் படத்தின் பாடல்கள் அனைத்தும் முத்தானவை. பேக் ரவுண்டு மியூசிக்கில் தேவா பின்னிப் பெடல் எடுத்திருப்பார்.
தொடர்ந்து ஒரு வருடம் ஓடி சாதனை புரிந்த படம் இது. உள்ளே போ..., கண்ணா கொஞ்சம் அங்கே பார்....எனக்கு இன்னோரு பேரு இருக்கு....நான் ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரி என்ற இந்தப்படத்தின் பஞ்ச் டயலாக்குகள் இன்று வரை மேடையில் மிமிக்ரி கலைஞர்களால் பேசப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது.