தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்டு என்று அழைக்கப்படுபவர் நடிகர் ஜெய்சங்கர். அதே போல அந்தக் காலகட்டத்தில் நகைச்சுவையில் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்துக் கொண்டு கொடிகட்டிப் பறந்தவர் நாகேஷ். இவர்களைப் பற்றி வியக்கத்தக்க தகவலை நடிகர் சோ பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
என்னுடைய அனுபவத்தில் சினிமாவில் சேரணும்னு ஆசையை வச்சிக்கிட்டு வெற்றி பெற்ற இருவர்னா அதுல ஒருவர் கதாநாயகன் ஆன ஜெய்சங்கர். இன்னொருவர் நகைச்சுவை நடிகரான நாகேஷ் என்கிறார் சோ. திரையுலகிலே கதாநாயகனாக உருவெடுப்பதை மனதிலே ஒரு லட்சியமாகவே வைத்துக் கொண்டு தன்னம்பிக்கையை மட்டும் துணையாகக் கொண்டு சரியான முறையில் திட்டமிட்டு சொன்னதை செய்தும் காட்டியவர் ஜெய்சங்கர்.
அதே மாதிரி அசாத்தியமான ஒரு திறமை இருந்தால் தான் இந்த சினிமா உலகிலே முன்னேற முடியும் என்பதற்கு உதாரணமாக நான் நாகேஷைப் பார்க்கிறேன். திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக தான் பார்த்துக் கொண்டு இருந்த வேலையை விட்டுட்டு, நாடகங்களில் நடிக்க ஆரம்பிச்சி அதுக்குப் பின்னால கொஞ்சம் கொஞ்சமாக திரைப்பட வாய்ப்புகளைப் பெற்று சினிமா உலகிலே ஒரு மிகச்சிறந்த நகைச்சுவை நடிகராக முன்னேறியவர் தான் நாகேஷ்.
சினிமா உலகிலே சேர்வதற்கு இவங்க ரெண்டு பேரையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாமா என்றால் நிச்சயமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றுதான் நான் சொல்வேன் என்று சொன்னார் சோ. காலமும், நேரமும் ஒத்துழைத்தால் திரைப்பட வாய்ப்பு கிடைக்கும். என்னதான் திறமைசாலியாக இருந்தாலும் அவங்களுக்கும் இது பொருந்தும் என்று ஒரு பத்திரிகைப் பேட்டியிலே சோ தெரிவித்துள்ளார்.





