பொதுவாக பொங்கல், தீபாவளி என்றாலே பெரிய பெரிய நடிகர்களின் புது படங்களின் வரவுதான் ரசிகர்களுக்கான கொண்டாட்டமாக இருக்கும். ஒவ்வொரு வருடமும் விஜய், அஜித், ரஜினி என இவர்கள்தான் பண்டிகை நாள்களில் ரசிகர்களை மகிழ்விக்க வருவார்கள். அதனால் சின்ன படங்கள் இந்த பண்டிகை நாளை டார்கெட் செய்வதே கிடையாது. இடைப்பட்ட நாள்களில் வார விடுமுறை, அல்லது வெள்ளிக்கிழமை என இந்த நாள்களை தேர்வு செய்து படங்களை வெளியிடுவார்கள்.
அந்த வகையில் இந்த பொங்கலுக்கு விஜயின் ஜன நாயகன் திரைப்படமும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படமும் ஒன்றாக வருவதாக இருந்தது. விஜய் படம் என்றாலே ஒரு வார காலத்திற்கு கிட்டவே நெருங்கவே முடியாது. இருந்தாலும் துணிந்து இறங்கினார் சிவகார்த்திகேயன். ஆனால் சில காரணங்களால் ஜன நாயகன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. பராசக்தி படம் மட்டுமே ரிலீஸானது.
ஜன நாயகன் வரவில்லை என்றதும் ஏற்கனவே ரிலீஸ் தேதியை தேடிக் கொண்டிருந்த படங்கள் இந்த பொங்கலை பயன்படுத்திக் கொண்டன. அதில் கார்த்தின் வா வாத்தியாரே படம் வெளியானது. அதனை தொடர்ந்து ஜீவா நடிக்கும் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் நேற்று ரிலீஸானது. ஆனால் இந்தப் படத்திற்கு பெரியளவில் புரோமோஷன் இல்லை. அதனால் இந்தப் படம் வெளியானதே பலருக்கும் தெரியாது.
இருந்தாலும் ஃபுல் எனர்ஜி வைபில் ஒரு நகைச்சுவையான படமாக இந்தப் படம் அமைந்திருக்க்கிறது. இந்த பொங்கலுக்கு குடும்பத்துடன் உட்கார்ந்து சிரிக்க வேண்டுமென்றால் இந்தப் படத்தை போய் பார்க்கலாம். படத்தை பார்த்த பலரும் பாசிட்டிவான விமர்சனத்தையே தந்து வருகின்றன. ஆங்காங்கே சில காட்சிகளில் நம்பகத்தன்மை இல்லை என்றாலும் அதெல்லாம் நமக்கு பெருசாக தெரியாது.

இந்தப் படத்தில் ஒரு பஞ்சாயத்து தலைவராக ஜீவாவின் கேரக்டர் அமைந்திருக்கிறது. ஒரு பக்கம் கல்யாண வீடு , இன்னொரு பக்கம் சாவு வீடு. இந்த இரு வீட்டாரிடமும் மாட்டிக் கொண்டு முழிக்கும் ஒரு பஞ்சாயத்து தலைவராக கிராமத்து தலைவராக அட்டகாசமாக நடித்துள்ளார் ஜீவா. இந்தப் படத்தின் இயக்குனரிலிருந்து டெக்னீசியன்கள் வரை மலையாள சினிமாவில் இருந்து வந்தவர்கள்.
படத்தில் இளவரசு, தம்பி ராமையா இவர்களை சுற்றித்தான் கதையே நகர்கிறது. படத்திற்கு விஷ்ணு விஜய் இசையமைத்திருக்கிறார். படத்தின் மொத்த ஓட்ட நேரம் 1 மணி நேரம் 55 நிமிடம். படம் ஆரம்பித்து ஒரு 15 நிமிடம் தொய்வு ஏற்படுவதாக இருந்தாலும் அதன் பிறகு படம் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.மொத்தத்தில் ஜனநாயகனை மிஸ் பண்ண ரசிகர்களுக்கு இந்தப் படம் கொஞ்சம் ஆறுதலை கொடுக்கும்.