ஜெமினி கணேசனை அடையாளம் தெரியாமல் விமர்சித்த பத்திரிக்கையாளர் : ஒரு சுவாரஸ்ய சம்பவம்

Gemini Ganesan
ஜெமினி கணேசன் அக்காலகட்டத்தில் இளம் பெண்களின் காதல் மன்னனாக வலம் வந்தவர். தனது வசீகரமான நடிப்பால் பலரையும் கட்டிப்போட்ட ஜெமினி கணேசன், எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் கோலோச்சிக்கொண்டிருந்த காலகட்டத்தில் தனக்கென ஒரு தனி டிராக்கில் சென்று முக்கிய நடிகராக வலம் வந்தார்.
இந்த நிலையில் ஜெமினி கணேசன் இரண்டு வேடங்களில் நடித்த ஒரு திரைப்படம் வெளியானபோது ஒரு பத்திரிக்கையாளர் அவரது கதாப்பாத்திரத்தை விமர்சித்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

Gemini Ganesan
1955 ஆம் ஆண்டு ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “கணவனே கண் கண்ட தெய்வம்”. இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன் ஒரு போர் வீரனாக நடித்திருப்பார். ஆனால் ஒரு காட்சியில் நாகராணி என்ற மங்கையின் சாபத்தால் கூன் விழுந்தவராக மாறிவிடுவார். இந்த இரு வேடங்களிலும் ஜெமினி கணேசன் மிக சிறப்பாக நடித்திருந்தார்.

Kanavane Kankanda Deivam
இத்திரைப்படத்தை ஹிந்தியில் தயாரிக்கலாம் என்று முடிவு செய்த தயாரிப்பாளர்கள், பிரபல பாலிவுட் நடிகரான திலிப் குமாரை நடிக்க வைக்கலாம் என முடிவு செய்து அவரை அழைத்து அத்திரைப்படத்தை பார்க்க வைத்தனர். ஆனால் திலிப் குமார், அத்திரைப்படத்தை பார்த்துவிட்டு, “இதில் ஜெமினி கணேசனே மிக சிறப்பாக நடித்திருக்கிறார். அவரையே ஹிந்தியிலும் நடிக்க வையுங்கள்” என கூறிவிட்டு சென்றுவிட்டாராம்.

Devta
அதன்படி “தேவ்தா” என்ற பெயரில் இத்திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் ஜெமினி கணேசன், அஞ்சலி தேவி, வைஜெயந்திமாலா ஆகியோர் நடித்திருந்தனர். இந்த ஹிந்தி திரைப்படத்தின் பிரிவ்யூ ஷோ, மும்பை பத்திரிக்கையாளர்களுக்கு திரையிடப்பட்டது. அப்போது இந்த படத்தை பார்த்த பத்திரிக்கையாளர்களில் ஒருவர், “கூன் விழுந்தவராக நடித்த நடிகர் மிக சிறப்பாக நடித்திருந்தார். ஆனால் போர் வீரனாக நடித்த நடிகர் அந்தளவுக்கு சிறப்பாக நடிக்கவில்லை” என கூறினாராம். அதாவது அத்திரைப்படத்தில் அந்த இரண்டு தோற்றங்களிலும் ஜெமினி கணேசன்தான் நடித்திருந்தார். ஆனால் அவரால் அதனை கண்டுபிடிக்க முடியவில்லையாம். அந்தளவுக்கு இரண்டு வேடங்களுக்கும் இடையே வேறுபாடு காட்டியிருந்தாராம் ஜெமினி கணேசன்.
இதையும் படிங்க: ஜடேஜாவுக்கு பிடித்த ஒரே தமிழ் பாடல்! அங்கேயும் நிக்காரு நம்ம கேப்டன் – அஸ்வின் கூறிய ரகசியம்