தாழ்த்தப்பட்ட சாதியினர் வாழும் ஒரு வறண்ட கிராமம் அத்திப்பட்டி. இங்குள்ள மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் வேண்டும் என்றால் 20 மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு மலையடிவாரத்தில் உள்ள ஒரு ஊற்றில் இருந்து தான் தண்ணீர் எடுத்து வர வேண்டும்.
அதனால் அங்குள்ள மக்கள் தங்கள் கிராமத்திற்கு ஒரு கிணறு வேண்டும் என்று பல மனுக்களை அரசாங்கத்திற்கு எழுதி வந்தனர். ஆனால் எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை. இதனால் வெறுப்படைந்து தேர்தலில் ஓட்டுப் போட மாட்டோம் என கூறுகின்றனர். அப்போது நடக்கும் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கின்றனர். ஒரு கிராமமே தேர்தலைப் புறக்கணித்தது என்று செய்தி தான் வந்தது. வேறு எந்தப் பலனும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.
வெள்ளைச்சாமி என்பவன் ஒரு கொலையை செய்துவிட்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து அந்தக் கிராமத்திற்கு வருகிறான். தண்ணீர் தேடி அவதிப்படுகிறான். அப்போது தான் அந்த கிராமத்தின் சூழ்நிலை என்னவென்று புரிந்து கொள்கிறான். கிராம மக்களுக்கு தண்ணீர் கொண்டு வருகிறான். நன்றி உணர்வு கொண்ட மக்கள் அவனை போலீசில் காட்டிக் கொடுக்காமல் காப்பாற்றுகின்றனர்.
ஒரு மேல்சாதி அரசியல்வாதி கிராம மக்கள் ஓட்டுப் போடாததால் கோபம் கொள்கிறார்.
அந்த கீழ்சாதி கிராமத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வெள்ளைச்சாமியை அடித்து வண்டியை நொறுக்கி மாட்டையும் கொல்கிறார். அதன்பிறகு வெள்ளைச்சாமி அந்த ஊர் மக்களின் உதவியுடன் ஓர் ஓடை வெட்டி அருவியில் இருந்து தண்ணீர் கொண்டு வர ஊர் மக்கள் ஒத்துழைப்போடு கால்வாய் வெட்டுகிறான்.
அந்தப்பகுதி அரசு அதிகாரிகள் இது சட்டப்படி தவறான செயல் என கூறி கிராமத்தினரை மிரட்டுகின்றனர். தண்ணீருக்காக நெடுந்தூரம் நடக்கும் அழகிரி என்னும் போலீஸ்காரனின் மனைவி சாந்தி, வெள்ளைச்சாமியை அழகிரி கைது செய்யப்போகும்போது தடுக்கிறாள்.
அதற்குள் கிராமத்து மக்கள் வெள்ளைச்சாமியைக் காட்டுக்குள் போகச் சொல்கின்றனர். காட்டுக்குள் ஓடிச் செல்லும் வெள்ளைச்சாமி அங்கும் தண்ணீர் கிடைக்காமல் இறந்து போகிறான்.
இங்கு ஒரு கதை கவிதையாக முடிகிறது. தண்ணீர் என்ற அடிப்படைத் தேவை ஒருவனுக்குக் கிடைக்காததால் என்னென்ன பாதிப்புக்குள்ளாகிறான் என்பதை காட்சியின் பிடியில் ரசிகனை உட்கார வைக்கிறார் இயக்குனர் கே.பாலசந்தர்.
முக்கியமாக நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இந்தப் படத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் கிராமம் ஒன்றில் ஜனநாயக நாட்டின் அடிப்படை உரிமையான தண்ணீர் கிடைக்காமல் அதற்கு அரசாங்கமும் உதவாமல் இருப்பதைப் படம் உணர்த்துகிறது.
கோமல் சுவாமி நாதன் நாடகமாக எழுதினார். பலமுறை இந்த நாடகம் கம்யூனிஸ கட்சி மேடைகளில் அரங்கேறியுள்ளது. பாலசந்தர் இயக்கத்தில் படமாக வெளியானதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. 1981ல் சிறந்த தமிழ்ப்படத்திற்கான தேசிய விருதையும், மாநில அரசின் சிறந்த படத்திற்கான விருதையும் பெற்று சாதனைப் படைத்தது.
குகன், சரிதா, ராதாரவி, சார்லி உள்பட பலர் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்துள்ளார்.
MGR Gemini…
Siragadikka aasai:…
இளையாராஜாவின் நடவடிக்கை…
Actor Karthick:…
80களின் இறுதியில்…