30 ஆண்டுகளை கடந்தும் ரசிகர்களின் மனதில் பாய்ந்து வரும் மகாநதி!.. அந்த படத்தில் இதை கவனித்தீர்களா?!...

Kamal
மகாநதி படம் கமலின் திரையுலக வரலாற்றில் ஒரு மைல் கல். இந்தப் படத்தில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. என்னன்னு பார்க்கலாமா...
இந்தப்படத்தைப் பொருத்தவரை படத்தின் பெயர் மட்டுமல்ல.... படத்தில் பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு நதிகளின் பெயர் தான் வைக்கப்பட்டுள்ளது.
கமலின் பெயர் கிருஷ்ணா, மகாநதி ஷோபனாவின் பெயர் காவேரி. சரஸ்வதியாக வருபவர் எஸ்.என்.லட்சுமி. சுகன்யாவின் பெயர் யமுனா. படத்தின் பெயரோ மகாநதி. என்ன ஒரு ரம்மியமான ஒற்றுமை பார்த்தீர்களா. கமலின் மகன் பெயர் பரணி.
படத்தின் கதை அழுத்தமானது. சிவப்பு விளக்குப் பகுதியில் மகளைத் தேடிக் கண்டெடுக்கும் தருவாயில், அப்பாவுக்கும் மகளுக்குமான அந்த மெய்சிலிர்க்கும் காட்சிகள் மனதை பிசைந்து விடுகிறது.
இன்னொரு இடத்தில் கமல் அழுது கொண்டே சொல்லும் வார்த்தைகள் கல்நெஞ்சையும் கரைத்துவிடும் வல்லமை படைத்தவை. ஒரு நல்லவனுக்குக் கிடைக்க வேண்டிய எல்லா மரியாதையும் கெட்டவனுக்கு கிடைச்சிடுதே, அது ஏன்...? எப்படின்னு கேட்கும் கேள்வி இன்றைய மக்களின் மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது.

Mahanathi
படத்தில் பக்குவமாகப் பேசிக் காலை வாரும் வில்லனாக வரும் அனீபா அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். அதே போல ஜெயிலராக வரும் சங்கரும் பட்டையைக் கிளப்பியிருப்பார். படத்தில் கமலை 'கிருஷ்ணா.. கிருஷ்ணா' என்று கூப்பிடும்போதெல்லாம் மாமனாராக வரும் பூர்ணம் விஸ்வநாதன் மனதில் நிறைந்து விடுகிறார்.
இருப்பதை விட்டுவிட்டுப் பறப்பதற்கு ஆசைப்படாதே என்பது தான் படம் சொல்ல வரும் சேதி. அதை ரசிகர்களுக்கு நவரச படையலாக்கியுள்ள விதம் இன்று வரை பேச வைக்கிறது.
இந்தப்படத்தைத் தயாரித்தவர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. படத்தின் அபார வசூலில் தன் கடன்களை எல்லாம் அடைத்து விட்டாராம். 16 வயதினிலே படத்தைத் தயாரித்த இவர் 17 வருடங்களுக்குப் பிறகு கமலை வைத்து தயாரித்துள்ளார். படத்தை இயக்கியவர் சந்தானபாரதி.
இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் காதில் தேனாகப் பாய்கின்றன. படத்தில் ஷோபனா பாடிய ஸ்ரீரங்க ரங்கநாதனின் பாதம் பாடல் மனநிம்மதியைத் தருகிறது. இடையிடையே வரும் பாரதி பாடல் புத்துணர்வைத் தருகிறது. நமக்கு இளையராஜாவின் மீது அளப்பரிய பற்றை உண்டாக்கி விடுகிறது.