நான் கண்ணதாசன் பையன்; அதனாலதான் பாட்டு எழுதல! - பகீர் தகவலை பகிர்ந்த கவியரசரின் வாரிசு
கண்ணதாசன் தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கவியரசராக கோலோச்சியவர். இவரது பாடல் வரிகள் காலத்தை தாண்டியும் நிலைப்பவை. இப்போதும் இவரது பாடல்களை விரும்பி கேட்பவர்கள் பலர் உண்டு. இவர் எழுதிய பாடல் வரிகளில் தொனிக்கும் சிந்தனை பலரையும் சிந்திக்க வைப்பவை ஆகும்.
இவ்வாறு தமிழ் சினிமா கவிஞர்களில் மிக புகழ் பெற்ற கவிஞராக திகழ்ந்தவர் கண்ணதாசன். இந்த நிலையில் கவிஞர் கண்ணதாசனின் மகனான அண்ணாதுரை கண்ணதாசன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது நிருபர் அவரிடம், “கண்ணதாசனின் மகனாக நீங்கள் நிறைய விஷயங்களை செய்திருப்பீர்கள். ஆனால் கண்ணதாசனின் மகனாக இந்த விஷயத்தை மட்டும் நான் செய்யவே இல்லை, எவ்வளவு காசு கொடுத்தாலும் நான் செய்யவில்லை என்று நீங்கள் கூறும் விஷயம் எது?” என்று ஒரு கேள்வியை கேட்டார்.
அதற்கு பதிலளித்த அண்ணாதுரை கண்ணதாசன், “நான் மது அருந்தமாட்டேன். எல்லாரும் கேட்பார்கள், கண்ணதாசன் மகன் நீ, குடிக்கமாட்டியா என்று. நான் கண்ணதாசனின் மகன் என்பதனால்தான் குடிக்கவில்லை. எனக்கு ஒரு வேளை குடிப்பழக்கம் இருந்தால் ‘அப்பனை போலத்தானே பிள்ளையும் இருப்பான்’ என்று சொல்லுவார்கள். அது எனது தந்தைக்குத்தான் கெட்ட பெயர்.
அதே போல் கண்ணதாசன் மகனாக இதை நான் செய்யமாட்டேன் என்று நான் நினைத்து வைத்திருந்தது பாடல்கள் எழுதுவது. ஒரு வேளை நான் பாடல் எழுதினால் அதனை எனது தந்தையின் பாடலோடு ஒப்பிட்டு பார்ப்பார்கள். ‘ஏன்யா அப்பா பெயரை கெடுக்குற’ என்று கூறுவார்கள். அதனால்தான் அதை நான் செய்யவில்லை” என்று அப்பேட்டியில் கூறியுள்ளார்.
கண்ணதாசனின் மகனான அண்ணாதுரை கண்ணதாசன் பல திரைப்படங்களில் விவேக்குடன் இணைந்து பல காமெடி காட்சிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.