
வெங்கட்பிரபுவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் பா.ரஞ்சித். அட்டகத்தி திரைப்படம் மூலம் இயக்குனரானார். அந்த திரைப்படத்தில் சென்னைக்கு அருகே வசிக்கும் இளைஞர்கள் காதலை எப்படி கையாளுகிறார்கள் என காட்சிப்படுத்தியிருந்தார். அப்படத்திற்கு பின் மெட்ராஸ், கபாலி, காலா என சீரியஸான படங்களை அவர் இயக்கினார். அதேநேரம், இந்த 3 திரைப்படங்களிலும் அழகிய மெல்லிய காதல் காட்சிகள் இடம் பெற்றிருந்தது.
அதன்பின் அவர் ஆர்யாவை வைத்து அவர் இயக்கிய ‘சர்பட்டா பரம்பரை’ திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த திரைப்படம் 70 கால கட்டங்களில் வட சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை பற்றிய திரைப்படமாகும்.

இப்படத்திற்கு பின் அடுத்து ஒரு காதல் திரைப்படத்தை ரஞ்சித் இயக்கி வருகிறார். இப்படத்திற்கு ‘நட்சத்திரம் நகர்கிறது’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க காதல் திரைப்படமாகும். இப்படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ், சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யாவின் மனைவியாக நடித்த துஷாரா விஜயன் மற்றும் ‘ஓ மை கடவுளே’ புகழ் அசோக் செல்வன் ஆகியோர் நடிப்பதாக கூறப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது.

ஆனால், அப்படத்திலிருந்து அசோக் செல்வன் விலகி விட்டார். வேறு சில படங்களில் நடிக்க வேண்டியிருப்பதால் இதிலிருந்து அவர் விலகிவிட்டதாக தெரிகிறது. எனவே, அவருக்கு பதில் வேறு நடிகரை நடிக்க வைக்கும் முயற்சியில் படக்குழு ஈடுபட்டிருந்தது.

அதன்பின் ஏதற்கு வேறு ஹீரோ.. அதான் நம்ம பையன் இருக்கானே என யோசித்த ரஞ்சித் அட்டக்கத்தி தினேஷை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துவிட்டாராம். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி படத்தில் தினேஷ் நடித்தார். அதன்பின், கபாலியில் ரஜினிக்கு பாடி கார்டாக நடித்தார். மேலும், ரஞ்சித் தயாரிப்பில் வெளியான ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்திலும் ஹீரோவாக நடித்தார். ரஞ்சித்தின் கம்பெனி ஆர்ட்டிஸ்டாகவே தினேஷ் மாறிவிட்டது குறிப்பிடத்தக்கது.