
உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஒருவரின் மகன் மாரடைப்பால் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் நேற்று காலை முதல் உள்ளாட்சித் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இன்றும் வாக்கு எண்ணிக்கைத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர் ஒருவரின் மகன் மாரடைப்பால் இறந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், பொள்ளிகாளிபாளையம் கிராமப் பஞ்சாயத்து 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட சுப்பிரமணியம் என்ற வேட்பாளர் வெற்றி பெற்றார். தந்தையின் வெற்றியை அவரது 21 வயது மகன் கார்த்தி மத்தளம் அடித்து சந்தோஷமாகக் கொண்டாடினார். அப்போது மயங்கி விழுந்த அவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இந்த சம்பவமானது அப்பகுதி முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



