More

வில்லன் நடிகர்களில் விசித்திரமான வில்லன் இவர் தான்…!

தமிழ்த்திரையுலகில் ஒரு சில நடிகர்கள் வருவார்கள். போவார்கள். அவர்கள் எப்போ வந்தாங்க…எப்போ போறாங்கன்னே தெரியாது. இன்னும் ஒரு சிலர் நிலைத்து நிற்பார்கள். அவர்கள் படம் என்றால் விரும்பிப் பார்க்கச் செல்வர். படத்தில் அவர்கள் தலை காட்டினாலே போதும். 

என் தலைவன் அவன் தான். அவனுக்காகவே நான் படம் பார்ப்பேன் என கிராமிய ரசிகர்கள் காலரைத் தூக்கி விட்டு அக்காலத்தில் டெண்ட் கொட்டாய்க்குள் செல்வதைப் பார்த்திருப்போம்.

கதாநாயகனுக்கு மட்டும் தானா இந்த மார்க்கெட் என்றால் இல்லை. வில்லனுக்கும் இந்த மார்க்கெட் உள்ளது. அந்தக்காலத்தில் மனோகர், பி.எஸ்.வீரப்பா, அசோகன், எம்.ஆர்.ராதா என தங்களது சிம்மக்குரலால் கர்ஜித்தனர். அவர்கள் திரையில் தோன்றினாலே ரசிகர்களுக்கு ஒரு துடிப்பு வந்து விடும். 

அது கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க அதிகரித்துக்கொண்டே இருக்கும். அதுபோல இடைக்கால தமிழ்சினிமாவில் அதாவது 80 மற்றும் 90களில் ஒரு ரவுண்ட் வந்தவர் ரகுவரன். இவர் உயரத்துக்கும், கம்பீரமான குரலுக்கும், வசனம் உச்சரிக்கும் ஸ்டைலுக்கும் இவரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருக்கும்.

ஹீரோவை அலற விட்டுவிடுவார் ரகுவரன். அவருக்கு சமமாக இவர் மோதுவார். உதாரணத்திற்கு பாட்ஷா படத்தைப் பார்த்தால் உங்களுக்கேப் புரிந்து விடும். 
ஆளாளப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினியையே மிரட்டுவார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவரது மிரட்டலில் சிறு குழந்தைகள் யாராவது பார்த்தால் நிச்சயம் அழுதே விடும். அவ்வளவு கம்பீரமான தொனி. 

அப்பேர்ப்பட்ட திறமைமிக்க ரகுவரன் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து அசத்தியுள்ளார். கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

Advertising
Advertising

இவரது வாழ்க்கைக்குறிப்புகளைச் சுருக்கமாகப் பார்ப்போம். 

ரகுவரன் கேரள மாநிலம், கொல்லங்கோட்டில் ராதாகிருஷ்ணன் – கஸ்தூரி தம்பதியருக்கு 11.12.1958ல் மூத்த மகனாகப் பிறந்தார். இவரது தந்தை தொழில் நிமித்தமாக கோவை வந்தார். அதனால் கல்லூரிக்கல்வியை கோவையிலேயே ரகுவரன் படித்து முடித்தார். 

ரகுவரனின் முதல் படம் ஏழாவது மனிதன். படம் வெளியான ஆண்டு 1982. கூட்டுப்புழுக்கள், கைநாட்டு, மைக்கேல் ராஜ் படங்களில் ஹீரோவாக நடித்தார். இவருக்கு பெயர் வாங்கித் தந்த படம் சம்சாரம் அது மின்சாரம். இதில் குணச்சித்திர வேடம் தான். மற்றொரு படம் அஞ்சலி. 

ரகுவரன் இந்தி, மலையாளம், தெலுங்கு மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். 

ரகுவரன் நடிகை ரோகிணியை காதல் திருமணம் செய்தார். இவரது சொந்த வாழ்க்கை இவரது போதைப்பழக்கத்தால் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து ரோகிணியும் பிரிந்து சென்றார். ரகுவரனால் அவரே விரும்பியும் போதைப்பழக்கத்தில் இருந்து மீள முடியவில்லை. 

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை சேத்துப்பட்டில் 19.3.2008ல் காலமானார். 

அவருக்கு ரிஷி என்ற ஒரு மகன் மட்டும் உள்ளார். 

ஒரு ஓடை நதியாகிறது, சில்க் சில்க் சில்க், மிஸ்டர் பாரத், பூவிழி வாசலிலே, ஊர்க்காவலன், ராஜா சின்ன ரோஜ1986 h, மக்கள் என் பக்கம், என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, தாய் மேல் ஆணை, முத்து, செல்வா, அருணாச்சலம், லவ் டுடே, உல்லாசம், நேருக்கு நேர், ஆஹா, ரட்சகன், நிலாவே வா, என் சுவாசக்காற்றே, உயிரிலே கலந்தது, அலை, ஆஞ்சநேயா, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், திருமலை, சச்சின், அமர்க்களம், ஒருவன், கந்தசாமி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.                                                                  
இவரது படங்களில் முத்தாய்ப்பான சிலவற்றை இங்கு பார்க்கலாம். 

சம்சாரம் அது மின்சாரம் 

1986ல் விசு இயக்கத்தில்  வெளியானது. இப்படத்தில் ரகுவரன், லட்சுமி, டெல்லி கணேஷ், மனோரமா, கிஷ்மு உள்பட பலர் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜானகி தேவி, அழகிய அண்ணி, சம்சாரம் அது மின்சாரம், கட்டி கரும்பே கண்ணா, ஊரத் தெரிஞ்சிக்கிட்டேன் ஆகிய பாடல்கள் சங்கர் கணேஷின் இசையில் படத்தில் இடம்பெற்றுள்ளன. படத்தில் வசனம் தான் பிளஸ் பாயிண்ட். அதிலும் விசுவிற்கும், ரகுவரனுக்கும் இடையில் நடக்கும் சொத்து பிரச்சனை குறித்த வசனம் டாப் டக்கர்.

ரகுவரன் தனக்கு உரித்தான ஸ்டைலில் நீண்ட வசனத்தைக்கூட அசால்டாக பொளந்து கட்டுவார். மிஸ்டர் அம்மை அப்ப முதலியார் என்று அவர் பேசும் அழகே அழகுதான்…வசனத்திற்காக இப்படம் வெற்றி விழா கொண்டாடியது. இப்படத்தின் வசனத்தை அந்த காலங்களில் பட்டி தொட்டி எங்கும் விசேஷ வீடுகளில், திருவிழா காலங்களில் ஒலிப்பெருக்கி மூலம் ஒலிபரப்புவர். 

மந்திரப்புன்னகை 

1986ல் தமிழழகன் இயக்கத்தில் வெளியான படம். சத்யராஜ், நதியா, ரகுவரன், சுஜிதா உள்பட பலர் நடித்துள்ளனர். மந்திரப்புன்னகையோ, பவள மல்லிகை, காலி பெருங்காய டப்பா, நான் காதலில் ஒரு ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இந்தப்படத்தில் வில்லனாக வந்து ரகுவரன் அசத்தியிருப்பார். சத்யராஜ் இருவேடங்களில் நடித்து அசத்தினார். மருத்துவர், காவல் ஆய்வாளர் ஆகிய வேடங்களில் நடித்து இருப்பார். 

மனிதன்

1987ல் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த், ரூபினி, ரகுவரன், ஸ்ரீவித்யா, டெல்லி கணேஷ், செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். கவிதாலயா நிறுவனம் தயாரித்த இப்படம் வெள்ளி விழா கொண்டாடியது. சந்திபோஸ் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ரகங்கள். ரகுவரனின் வில்லத்தனம் செம மாஸ். ரஜினிக்கு சமமாக நடித்து மிரட்டியிருப்பார். காள காள, மனிதன் மனிதன், முத்து முத்து பெண்ணை, வானத்த பார்த்தேன், ஏதோ நடக்கிறது ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றன. 

பாட்ஷா 

1995ல் வெளியான இப்படத்தில் ரஜினிகாந்த், நக்மா, ரகுவரன், சரண்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் மாணிக்கம் என்ற முன்னாள் மும்பை தாதாவாகவும், ஆட்டோக்காரனாகவும் மாறுபட்ட ரோல்களில் அசத்தியிருப்பார். ஸ்டைலு மன்னன் யாருன்னா இவருதான் என இந்தப்படத்தில் ஆணி அடித்தாற்போல் நிரூபித்திருப்பார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.

ரகுரவனின் மிதமிஞ்சிய வில்லத்தனத்தை இப்படத்தில் காணலாம். அவர் மும்பையில் ரஜினிக்கு இணையான பெரிய தாதாவாக இருப்பார். தேவாவின் இன்னிசையில் நான் ஆட்டோக்காரன், அழகு, ஸ்டைலு, ஸ்டைலுதான், பாட்ஷா பாரு, தங்கமகன், ரா ரா ரா ராமையா ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. 

முதல்வன் 
1999ல் வெளியான இப்படம் ஷங்கர் இயக்கியது. அர்ஜூன், மனிஷா கொய்ராலா, சுஷ்மிதா சென், வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தியிலும் நாயக் என்ற பெயரில் வெளியானது. 2000ல் இப்படத்திற்கு பிலிம்பேர் விருது கிடைத்தது. ரகுவரன் இப்படத்தில் முதல்வராக நடித்து இருப்பார்.

அர்ஜூன் அவரிடம் டிவி நிகழ்ச்சிக்காக பேட்டி கேட்கும் நிகழ்ச்சி செம மாஸ்…! ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் பட்டையைக் கிளப்பின. 
குறுக்கு சிறுத்தவளே, முதல்வனே, உப்பு கருவாடு, அழகான ராட்சஷியே, உளுந்து வெதைக்கையிலே, ஷக்கலக்க பேபி ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

Published by
adminram

Recent Posts