கலைஞர் அறிய உளமார உறுதி கூறுகிறேன் – வார்டு உறுப்பினரின் வித்தியாசமான பதவிப் பிரமானம் !
மதுரைச் சேர்ந்த ஊராட்சி வார்டு உறுப்பினர் ஒருவர் கலைஞர் அறிய உறுதி ஏற்கிறேன் எனக் கூறியது வைரல் ஆகி வருகிறது.
உள்ளாட்சித் தேர்தலில் பிரதிநிதிகளின் பதவிப் பிரமாணம் கடந்த 6 ஆம் தேதி நடந்தது. இதை அடுத்து மதுரை மேற்கு ஒன்றியத்தில் உள்ள மஞ்சம்பட்டி ஊராட்சி 6ஆவது வார்டு உறுப்பினராக பார்வதி லிங்கம் என்பவரின் பதவி பிரமானம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அவர் பதவிப் பிரமானம் செய்து வைக்கும் அதிகாரி சொல்வதை வரிசையாக சொல்லும் பார்வதி, கடைசியாக கடவுள் அறிய என்று சொல்லும் போது பார்வதி அதை சொல்லாமல் கலைஞர் அறிய என்று சொல்லி பதவிப் பிரமானம் செய்துகொள்கிறார். இந்த வீடியோ காட்சிகளை பகிர்ந்து வரும் திமுகவினர் கலைஞரை நினைத்து புளங்காகிதம் அடைந்துள்ளனர்.
இந்த வீடியோவை தனது டிவிட்டர் பகிர்ந்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின் ‘இதைப் பார்க்கையில் என் கண்கள் குளமாகின’ எனத் தெரிவித்துள்ளார்.