Categories: karur death latest cinema news latest news tvk karur tvk karur meeting tvk vijay கரூர் தவெக கூட்டம் கரூர் மரணம் தவெக விஜய்

TVK Vijay: 6 குழந்தைகள்.. 16 பெண்கள்… 33 பேர் மரணம்!.. கரூரில் மரண ஓலம்!…

TVK Karur: தவெக தலைவர் விஜய் இன்று மக்களை சந்திப்பதற்காக கரூருக்கு வந்தபோது அங்கு கூட்ட நெரிச்லில் சிக்கி 30க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவம்தான் நாடெங்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தவெக தலைவர் விஜய் தமிழகத்தில் உள்ள எல்ல மாவட்டங்களுக்கும் சென்று சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டார். துவக்கமாக திருச்சியில் துவங்கி கடந்த வாரம் திருவாரூர் மாவட்டம் வந்தார். இன்று நாமக்கல், கரூர் ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கும் செல்ல திட்டமிட்டு இன்று காலை சென்னையிலிருந்து தனி விமான மூலம் திருச்சி வந்து அங்கிருந்து கார் மூலம் நாமக்கல் வந்தார்.

பிரச்சார வேனில் போலீசார் அனுமதி அளித்திருந்த இடத்தில் பேசி முடித்துவிட்டு கரூருக்கு சுமார் மாலை 7 மணியளவில் சென்றார். நாமக்கல்லை விட கரூரில் அதிக கூட்டம் கூடி இருந்தது. அங்கு 10 ஆயிரம் பேர் வரை கூடுவார்கள். பாதுகாப்பு தர வேண்டும் என தவெக சார்பில் போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. அதேநேரம், போலீசார் விதித்த எந்த விதிமுறைகளையும் தவெகவினர் பின்பற்றவில்லை என சொல்லப்படுகிறது

விஜய் அங்கிருந்து பேசிவிட்டு சென்றபோது கூட்ட நெரிசிலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என பலரும் மயங்கி விழுந்தனர். உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை ஆம்புலன்ஸில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் 29 பேர் மரணமடைந்த நிலையில்தான் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் கூறி அதிர்ச்சியை கொடுத்தார். தற்போது வரை 6 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 33 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்து உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளி வந்திருக்கிறது. இந்த செய்தி நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

tvk vijay namakkal

மருத்துவமனையில் பலருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் நாளை கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்க திட்டமிட்டு இருக்கிறார்கள். கரூரில் பல பேரும் உயிரிழந்ததால் மருத்துவமனைகள் முழுவதும் மரண ஓலம் கேட்கிறது. தங்கள் குடும்பத்தினரை பிரிந்த உறவினர்கள் கண்ணீரில் கதறும் சப்தங்கள் கண்ணீரை வரவழைக்கிறது.

இதற்கிடையில் கூட்டத்தில் மயங்கி விழுந்தவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்க்கப்பட்டாலும் அவர்களுக்கு சிகிச்சை அளியுங்கள், அதற்கான செலவை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்திருக்கிறார்.

Published by
ராம் சுதன்