எம்ஜிஆருக்காக எழுதிய பாடல் சிவாஜி படத்துக்குப் போனது… அதிர்ந்த புரட்சித்தலைவர்!

0
117

சிவாஜிக்கு புலமைப்பித்தன் பாட்டு எழுதினாலும் எம்ஜிஆருக்காகத் தான் அவர் வெளி உலகுக்குத் தெரிந்தார். எம்ஜிஆருக்கு எழுதப்பட்ட பாடல் ஒன்று சிவாஜி படத்துக்குப் போனது. இதைக் கேள்விப்பட்ட எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.

தமிழ்சினிமா உலகில் இலக்கியத் தரத்தோடு பாடல் எழுதிய அற்புதமான கவிஞர். ஆரம்பத்தில் தமிழாசிரியராக வேலை பார்த்தார். இவருக்கு தமிழ்சினிமாவில் பாடல் எழுத வேண்டும் என்று தீராத ஆசை. அப்படி இருக்கும்போது அவர் முயற்சி செய்யும்போது சிவாஜி படத்திற்குத் தான் முதலில் வாய்ப்பு வந்ததாம்.

‘அன்புக்கரங்கள்’ படத்திற்குத் தான் பாடல் எழுதினார். அது படக்குழுவிற்குப் பிடிக்கவில்லையாம். அடுத்ததாக எம்ஜிஆரின் ‘குடியிருந்த கோவில்’ படத்திற்கு பாடல் எழுத வாய்ப்பு கிடைத்தது. அது தான் ‘நான் யார் நான் யார் நீ யார்’ என்ற பாடல். இது பெரும் புகழ் பெற்றது. இதனால் எம்ஜிஆருக்கும், புலமைப்பித்தனுக்கும் நல்ல நட்பு உருவானது. இவர் தொடர்ந்து புலமைப்பித்தனுக்குப் பாடல் எழுத ஆரம்பித்தார்

ஆனால் சிவாஜியைத் தான் புலமைப்பித்தனுக்கு ரொம்ப பிடிக்குமாம். சிவாஜி படத்துக்கு பாடல் எழுத ஆசை இருந்தது. ஆனால் வாய்ப்பு வரவில்லை. இவரும் முயற்சி பண்ணவில்லை. ஆனால் சிவாஜி படத்துக்கும் பாடல் எழுத வாய்ப்பு இவரைத் தேடி வந்தது.

எம்ஜிஆரின் ‘நினைத்ததை முடிப்பவன்’, சிவாஜியின் ‘சிவகாமியின் செல்வன்’ என இரு படங்களும் ஒரே காலகட்டத்தில் உருவாகிக் கொண்டு இருந்தது. இந்த இரு படங்களுக்கும் எம்எஸ்.விஸ்வநாதன் இசை அமைக்கிறார். எம்ஜிஆர் ஒரு காதல் பாடலை புலமைப்பித்தனை எழுதச் சொல்கிறார். அது எம்ஜிஆருக்குப் பிடிக்கவில்லை.

அடுத்த பாடல் எழுதச் சொல்கிறார். அது ஓகே ஆனதும் வாங்கிக் கொள்கிறார். அதன்பிறகு சிவாஜி படத்துக்குப் பாடல் எழுதும் வாய்ப்பு வருகிறது. அப்போது சிவாஜி படக்குழு சொன்ன சூழலுக்கு எம்எஸ்வி. புலமைப்பித்தன் முதலில் எழுதிய பாடல் கச்சிதமாகப் பொருந்தியதால் அதைக் கொடுத்து விட்டாராம்.

அப்போது புலமைப்பித்தனும் அதைக் கேள்விப்பட்டு சந்தோஷப்பட்டாராம். அதே நேரம் பயமும் வந்தது. நாம் எம்ஜிஆருக்கு எழுதிய பாடல் சிவாஜி படத்துக்குப் போனதால் அவர் எதுவும் நினைத்துக் கொள்வாரோ என பயந்துவிட்டாராம். அதை நேரடியாக எம்ஜிஆரிடமே சொல்லிவிட முடிவு செய்தார். அதை எம்ஜிஆரிடம் சொல்லும் போது எம்ஜிஆருக்கு அதிர்ச்சி.

தான் வளர்த்து விட்ட கவிஞர் தனது போட்டியாளரிடம் சென்று பாட்டு எழுதிவிட்டாரே என எண்ணினாராம். உடனே நீங்க விரும்பலைன்னா நான் சிவாஜி படத்துக்குப் பாடல் எழுதறதை விட்டுடறேன்னு சொன்னாராம். அதுக்கு கவிஞர்னா எல்லாப் படத்துக்கும் தான் பாடல் எழுதணும்னு எம்ஜிஆர் சொல்கிறார். அதன்பிறகு நான் உங்களுக்காக எழுதிய பாடல் தான்.

அதை நீங்க வேண்டாம்னு சொன்னதும் சிவாஜி படத்துக்குப் போனது என்று சொல்ல ஐயய்யோ அந்தப் பாடலைப் போய் வேண்டாம் என்று சொல்லி விட்டோமே என எம்ஜிஆர் யோசித்தாராம். அது தான் ‘இனியவளே என்று பாடி வந்தேன். இனி அவள் தான் என்று ஆகி விட்டேன்…’ என்ற அற்புதமான பாடல் தான் அது.

‘ஓராயிரம் காலம் இந்த உள்ளம் ஒன்றாக ஒன்றானதொரு வாழ்வை இன்ப வெள்ளம் ஒன்றாக துணை தேடி வரும்போது கண்ணில் என்ன நாணமோ? குணம் நாட்டில் உருவான பெண்மை என்ன கூறுமோ?’ என பாடலின் உள்ளே வரிகளை வைத்திருப்பார் புலமைப்பித்தன்.

‘இதழால் உடல் அளந்தான். இவளோ தன்னை மறந்தாள். ஏன் என்பதை யார் சொல்வது இன்னும் மவுனம் ஏன்’ என்று காம இன்பத்தைக் கூட வெகு அழகாகச் சொல்லி இருப்பார் புலமைப்பித்தன்.சிவாஜி படத்துக்காக அவர் எழுதிய முதல் பாடல் இதுதான். தொடர்ந்து சிவாஜியின் பல படங்களுக்கு அவர் பாடல் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

google news