நான் காப்பி ரைட்ஸ்லாம் கேட்கமாட்டேன்!. இளையராஜாவை அட்டாக் பண்ணும் தேவா!...

Ilayaraja Deva: தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர். 80களில் ராஜாவின் இசையை நம்பியே பெரும்பாலான படங்கள் உருவானது.
அவரின் பாடல் பட்டி, தொட்டியெங்கும் ஒலித்தது. பல படங்களின் வெற்றிக்கே இளையராஜாவின் பாடல்கள் முக்கிய காரணமாக இருந்தது. மொக்கை படங்களை கூட அவரின் பாடல்கள் வெற்றி பெற செய்தது. இளையராஜா இசையமைக்க துவங்கிய பின்னர்தான் தமிழ்நாட்டில் ஆடியோ கேசட்டுகள் அதிகம் விற்க துவங்கியது.
காலத்திற்கும் மறக்கமுடியாத பல இனிமையான பாடல்களை இளையராஜா கொடுத்தார். அவரின் பாடல்களே பலருக்கும் ஆறுதலாகவும், மனக்காயங்களுக்கு மருந்து போடுவதாகவும் அமைந்தது. இப்போது 83 வயது ஆகியும் சுறுசுறுப்பாக படங்களுக்கு இசையமைப்பது, இசை நிகழ்ச்சிகளை நடத்துவது என செயல்பட்டு வருகிறார்.
அவரின் பாடல்கள் பல இடத்திலும் ஒலித்துகொண்டிருக்கிறது. அந்நிலையில்தான் தனது பாடல்களுக்கு தன்னுடன் அனுமதி வாங்காமல் பயன்படுத்தக்கூடாது என போர்க்கொடி தூக்கினார். எனது பாடலை பாடக்கூடாது என அவரின் நண்பரும் பின்னணி பாடகருமான எஸ்.பி.பி.க்கே நோட்டீஸ் அனுப்பினார்.
இதையடுத்து ‘இளையராஜா சம்பளம் வாங்கிகொண்டுதான் படத்திற்கு இசையமைத்தார். அவர் போட்ட பாடல்கள் தயாரிப்பாளருக்கே சொந்தம். அந்த பாடல்களை ஆடியோ நிறுவனத்திற்கு தயாரிப்பாளர் கொடுத்துவிட்டால் அது அந்த நிறுவனத்துக்கே சொந்தம்’ என சிலர் பேசினார்கள். ஆனால், இளையராஜா எதற்கும் விளக்கம் அளிக்கவில்லை. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல் இடம் பெற்றிருந்ததால் நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா. தற்போது அது கொஞ்சம் ஓய்ந்திருக்கிறது.
இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் தேவா ‘நான் காப்புரிமை எல்லாம் கேட்க மாட்டேன். அதன்மூலம் எனக்கு பணம்தான் வருமே தவிர புகழ் வராது. என்னோட பாட்டை இப்ப வர படங்களிலும் போடுறாங்க. அதன் மூலம் நான் திரும்பி வரேன். இப்ப இருக்க 2K கிட்ஸ் வரைக்கும் என்னை தெரிகிறது. பணத்தை விட எனக்கு இதுதான் முக்கியம். பணத்தை விட குழந்தைங்க ரசிக்கணும். இது எவ்வளவு கோடி கொடுத்தாலும் கிடைக்காது’ என சொல்லியிருக்கிறார்.