More

அப்டிலாம் சொல்லக்கூடாது… ஹிந்தியும் படிக்கணும்…நடிகர் வேண்டுகோள்….

கடந்த ஞாயிற்றுக்கிழமை டிவிட்டர், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் #ஹிந்தி_தெரியாது_போடா என்கிற ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்தது. 2 லட்சம் பேர் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தியதால் டிவிட்டரில் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருந்தது. 

மேலும், ஹிந்தி தெரியாது போடா, நான் தமிழ் பேசும் இந்தியன் என பொறிக்கப்பட்டிருந்த டீ சர்ட்களை உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, யுவன் சங்கர் ராஜா, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பிரபலங்கள் அணிந்து போஸ் கொடுக்க டிவிட்டரே அதகளமானது. இது பாஜக ஆதரவாளர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.எனவே ‘திமுக வேண்டாம் போடா’ என்கிற ஹேஷ்டேக்கை கையில் எடுத்து டிரெண்டிங் செய்ய துவங்கினர்.

இந்நிலையில், இது தவறான முன்னுதாரனம் என நடிகர் அபி சரவணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரின் முகநூலில் இட்ட பதிவு:

Advertising
Advertising

கடந்த இரு நாட்களாக 'இந்தி தெரியாது போடா' என்ற வாசகம் பிரபலங்களால் பிரபலப்படுத்தப்படுகிறது. அவர்களுக்கு எனது கண்டனங்களும், சகோதரத்துவ, நட்பு அடிப்படை சுட்டிக்காட்டலும்.

இந்தி என்பது ஒரு மொழி. இந்தி ஒரு தகவல் மீடியம். தகவல்களை பரிமாறிக் கொள்ள இந்தியாவில் அதிகப்படியாகப் பேசப்படும் மொழிகளில் ஒன்று. நமது தாய்மொழி தமிழ் நமக்கு உயிர்போல. அதுபோல இந்தியைத் தாய்மொழியாக கொண்ட இந்தியர்களுக்கு அது ஒரு சிறப்பான உணர்வு.

சில தீவிர இந்தி மொழிப் பற்றாளர்கள், உணர்வாளர்கள் மற்றும் சில அரசியல்வாதிகள், அரசியல் ஆதாயங்களுக்காக இந்தியைத் திணித்து நமக்கு அதாவது நமது முதல் சந்ததிக்கு ஒருவித வெறுப்பை உருவாக்கிவிட்டனர். ஆனால், இந்தியைப் படித்த பல ஆயிரக்கணக்கான நண்பர்கள் இன்று மத்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிலும் வெளிநாடுகளிலும் நல்ல பணியில் நல்ல சம்பளத்தில் பணிசெய்து குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர்.

மொழி மட்டுமல்ல எந்த ஒரு விஷயத்தையும் வலுக்கட்டாயமாகத் திணித்தால் அல்லது கட்டாயப் டுத்தினால் இயற்கையாகவே ஒருவித வெறுப்பு உண்டாகும். நவீன காலத்தில் இன்றைய இளைஞர்களாகிய நாங்கள் இந்தியைக் கற்காமல் உதாசீனப்படுத்தியதால், வட நாடுகளுக்கு செல்லும் போது உணவு, உறைவிடம் மற்றும் இதர அடிப்படைத் தேவைகளுக்குக்கூட அடுத்தவரிடம் தகவலை மொழியால் பரிமாற முடியாமல் சைகை மூலம் கஷ்டப்பட்டுப் பேச வேண்டியிருக்கிறது.

இந்தி கற்பதால் நமது அறிவு மழுங்கப் போவதில்லை. இந்தியை ஒரு மொழியாக நிச்சயம் இந்த நவீன காலத்தில் கற்றுகொள்வதில் எந்தத் தவறும் இல்லை. அந்தக் கால மன்னர்கள், கவிஞர்கள், புலவர்கள் எனப் பல மொழிகள் கற்றறிந்தவர்கள் கல்வி, கேள்வியில் சிறந்து விளங்கினர். ஆனால், எந்தக் காலத்திலும் தமிழைத் திட்டமிட்டுத் தவிர்த்து அல்லது நீக்கி இந்தியைத் திணித்தால் தமிழனாக ஒரு நொடிகூட அனுமதிக்கக் கூடாது; அனுமதிக்க முடியாது.
உதாரணமாக, தமிழ்நாட்டில் உள்ள ஏடிஎம் மெஷின்கள், அறிவிப்புப் பலகைகள், மத்திய அரசு அலுவலகங்களில் தமிழுடன் இந்தியும் ஆங்கிலமும் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், தமிழைத் தவிர்த்தால் தமிழ்நாடு மீண்டும் ஒரு பாடத்தினை உலகிற்குக் கற்றுதரும். அது தமிழனின் மொழிப்பற்று வீரம், ஒற்றுமை.

ஆனால், ஒரு சில பிரபலங்கள் லைக்குகள் பெறுவதற்காக ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகத்தைப் பிரபலப்படுத்துவது இளைய சமுதாயத்திற்கு நாம் தரும் தவறான முன்னுதாரணம். ‘இந்தி தெரியாது போடா’ எனத் தனக்குப் பிடித்த பிரபலத்தின் படத்தை, சமூக வலைதளத்தில் மட்டுமல்ல தனது மனதிலும் பகிர்ந்து, பதிந்து கொள்கிறது இளைய சமுதாயம்.

நமது உயிருக்கும் மேலான தாய்மொழி தமிழுக்கு முதலிடம் அளித்து, ஆங்கிலம் மற்றும் இந்தியையும் புறக்கணிக்காமல் அதையும் ஒரு மொழியாக நினைத்துக் கற்றுக் கொள்ள வேண்டும் அது நமக்கு நிச்சயம் உதவும். எனவே, இந்தி எதிர்ப்புப் பிரபலங்கள் தங்கள் ‘இந்தி தெரியாது போடா’ என்ற வாசகங்கள் டீசர்ட் போட்டோக்களை நீக்க அன்போடு கேட்டுகொள்கிறேன்.

அன்புடன்,

இந்தி தெரியாத தமிழன்
அபி சரவணன்
என அவர் பதிவிட்டுள்ளார்.

Published by
adminram

Recent Posts