
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கிய ’தர்பார்’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் ஒன்று இருப்பதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் சுட்டிக்காட்டினார். அதாவது இந்த படத்தில் ’பணமிருந்தால் ஜெயிலில் இருப்போர் கூட ஷாப்பிங் சென்று வரலாம்’ என்று ஒரு வசனம் இடம் பெற்று இருந்தது.
இந்த வசனம் சசிகலாவை குறிப்பதாக நெட்டிசன்கள் குறிப்பிட்ட நிலையில் இது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட ஒரு சிலர் கருத்து கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று சசிகலாவின் வழக்கறிஞர் படக்குழுவினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். சசிகலா குறித்து இடம்பெற்றுள்ள அந்த குறிப்பிட்ட வசனத்தை படத்திலிருந்து நீக்கவில்லை என்றால் ரஜினி மற்றும் ஏஆர் முருகதாஸ் மீது வழக்கு பதிவு செய்ய இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்
இந்த நிலையில் இன்று காலை காட்சி முதல் சர்ச்சைக்குரிய அந்த வசனம் நீக்கப்பட்டுள்ளதாக செய்திகள் ஆகியுள்ளது. இதனையடுத்து இந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது