கூகுள் பேயில் நண்பருக்கு அனுப்பியதோ 300 ரூபாய்… ஆனால் பறிபோனதோ ஒரு லட்சம்!
பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் ஒரு லட்ச ரூபாயை ஆன்லைன் மோசடி மூலம் இழந்துள்ளார்.
பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் நாகபூஷண். இவர் தனது நண்பருக்காக கூகுள் பே மூலமாக 300 ரூபாய் அனுப்பியுள்ளார். ஆனால் அந்த தொகை அவர் நண்பருக்கு சென்று சேரவில்லை. இதனால் அவர் இணையத்தில் இருந்து கூகுள் பே வாடிக்கையாளர் சேவை மைய நம்பரை எடுத்து போன் செய்து தனது புகாரைக் கூறியுள்ளார்.
எதிர்முனையில் சேவை மைய அதிகாரி போல பேசிய மர்ம கும்பல் பணத்தைத் திரும்ப அனுப்ப வங்கி கணக்கு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அனுப்பும்படி கூறி தெரிவித்துள்ளார். இவரும் நம்பி அனைத்து விவரங்களையும் அவர் சொல்லிய நம்பருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் அவர் வங்கிக் கணக்கில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த நாகபூஷன் தான் ஆன்லைன் போர்ஜரி கும்பலிடம் பணத்தை இழந்ததை அறிந்து சைபர் கிரைம் போலிஸாரிடம் புகாரளித்துள்ளார்.