Cinema History
எப்படி நடிப்பதுன்னு தெரியாமல் விழித்த நடிகை… அந்த நேரத்தில் சிவாஜி செய்த செயல்..!
நடிப்பின் இமயம் என்றால் சிவாஜி தான். உடன் நடிக்கும் நடிகர்களுக்கும் ஆபத்பாந்தவனாக உதவக்கூடியவர். அப்படித்தான் நடந்த ஒரு சம்பவம் தான் இது.
இன்று நடிகர் திலகம் சிவாஜிகணேசன் நம்மிடையே இல்லை. ஆனால் இன்று வரை நாம் அவரைக் கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம் என்றால் அதற்கு முக்கிய காரணம் இந்தத் தாய்த்திருநாட்டின் மிகச்சிறந்த நடிகர் அவர்.
தான் நடிக்கின்ற படங்களில் மத்த நடிகர்களும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதற்காக அவர் செய்த தியாகங்கள் இருக்கிறதே. அதுதான் நாம் கொண்டாடுவதற்கு முக்கிய காரணம். அதற்கு ஒரு உதாரணம் தான் இது.
சிவாஜியுடன் சரோஜாதேவி நடித்த முதல் படம் சபாஷ் மீனா. இந்தப் படத்தில் முதலில் சிவாஜிக்கு ஜோடியாக நடிக்கிற வாய்ப்பு சரோஜாதேவிக்குக் கிடைக்கல. சந்திரபாபுவுக்கு ஜோடியாக நடிக்கிற வாய்ப்பு தான் கிடைச்சது.
சிவாஜிக்கு ஜோடியாக சரோஜாதேவி நடித்த முதல் படம் பாகப்பிரிவினை. அந்தப் படத்தின் படப்பிடிப்பில் ஒருநாள் சரோஜாதேவி சோகத்துடன் நின்றிருந்தார். அதைப் பார்த்த சிவாஜி, ‘என்ன சரோஜா ஏன் சோகமா இருக்கே?’ என்று கேட்டார்.
‘இல்ல. அடுத்த காட்சில நான் பிரசவ சீன்ல நடிக்கிறேன். நான் சின்னப்பொண்ணு.எனக்கு இன்னும் கல்யாணமே ஆகல. எனக்கு எப்படி பிரசவத்தைப் பற்றியும், பிரசவ வலியைப் பற்றியும் தெரியும்?’ ‘அதுக்கா இவ்வளவு குழப்பம்…’ என்ற சிவாஜி அடுத்த கணம் செய்த காரியம் தான் முக்கியமானது. அப்படியே தரையில உருண்டு படுத்தார் சிவாஜி.
ஒரு பெண் பிரசவ வலியில் எப்படி துடிப்பாளோ அதைப் போலவே தத்ரூபமாக நடித்துக் காட்டினார். அவர் எப்படி நடித்துக் காட்டினாரோ அப்படியே நான் துல்லியமாக நடித்தேன்.
அந்தக் காட்சிக்கு எனக்கு மிகப்பெரிய பாராட்டைப் பெற்றது என்றால் அதற்கு முக்கிய காரணம் சிவாஜி அன்று எனக்கு சொல்லிக் கொடுத்த நடிப்பு தான் என பல பத்திரிகைகளில் சொல்லி இருக்கிறார் சரோஜாதேவி. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
சிவாஜிக்கு நடிப்பு தான் உயிர் மூச்சு. சிறு வயது முதலே நடித்ததாலும், நடிப்பின் மீது தீராதக் காதல் இருந்ததாலும் அவருக்கு அத்தனை வகையான நடிப்புகளும் அத்துப்படியானது. அப்பத்தான் அவர் நடிகர் திலகம் ஆனார் என்றால் அது மிகையில்லை.