சுதந்திர கால கட்டத்தில் வந்த செம த்ரில்லர் படம்

ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி 1947 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். டி. ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். கோவிந்தன், என். ஆர். சுவாமிநாதன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்துக்கு பாரதிதாசன் திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதினார்.

ஜி.ராமநாதன் இசை அமைத்தார். பி.எஸ்.கோவிந்தன், என்.ஆர்.சுவாமிநாதன், காளி என் ரத்னம், எம்.ஜி.சக்கரபாணி, எஸ்.வரலட்சுமி, பி.கே.சரஸ்வதி, வி.என்.ஜானகி, மாதுரி தேவி உள்பட பலர் நடித்துள்ளனர். 

இப்படத்தில் இசை சக்கரவர்த்தி என்றும் இசை மேதை என்றும் புகழப்பட்ட ஜி.ராமநாதன் ஒரு சந்நியாசி வேடத்தில் வருகிறார். இந்த ஒரு படத்தில் மட்டுமே நடித்த அவர் இப்படத்திற்காக சொந்தக்குரலில் ஒரு பாடலை பாடியும் உள்ளார். 

இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது ஒரு சாகச திரில்லர் படம். இதன் தெலுங்கு ரீமேக் 13 வருடங்களுக்குப் பிறகு வெளியானது. 

ஒரு மந்திரவாதி அனைத்துவிதமான சக்திகளையும் பெற கடும் தவம் செய்கிறான். இதற்காக 1000 மணமகன்களில் தலைகளை துண்டித்தால் தனது லட்சியத்தை அடைந்து விடலாம் என்ற திட்டத்துடன் இருக்கிறான். இதற்காக நீதிகேது என்ற அரசரின் மகள் அபூர்வ சிந்தாமணியை பயன்படுத்துகிறான். அவள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சரியாக சொன்னால் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம். இல்லையேல் அவர்கள் தலை துண்டிக்கப்படும் என்பதுதான் விதி. 

அதன்படி 999 பேர்களது தலை துண்டிக்கப்படுகிறது. இவர்களில் இளவரசன் மெய்யழகனின் 6 மூத்த சகோதரர்களும் அடங்குவர். இதனால் சிந்தாமணியை பழிவாங்க அவரது ராஜியத்திற்கு வருகிறார் மெய்யழகன். இளவரசனுக்கு சிந்தாமணியின் தோழி செங்கமலத்தின் மீது காதல் உண்டாகிறது. சிந்தாமணியின் கேள்விக்கான பதிலைத் தேடி அலைகிறார். 

இறுதியில் அவளது கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்கிறான். அவள் மேல் ஆர்வமாக உள்ள தனது உறவினரை திருமணம் செய்து கொள்ள அறிவுறுத்துகிறார். அத்துடன் மந்திரவாதியின் சதித் திட்டத்தையும் அம்பலப்படுத்துகிறார்;. இளவரசர் சிந்தாமணியின் தோழியான இளவரசி செங்கமலத்தையும் திருமணம் செய்து கொள்கிறார்.  

வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறையேனும் பாருங்கள். உங்கள் அறிவுத்தேடலுக்கு பெரும் தீனியாக அமையும் இப்படம்.

Published by
adminram