More

10 நிமிடத்தில் மொத்த திகிலையும் ஏற்படுத்திய துணிவே துணை

ஜெய்சங்கர் நடித்த ஆக்சன் படங்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம்.ஆக்சன் படங்கள் என்றால் ஒரு காலத்தில் ஜெய்சங்கர்தான் ஞாபகம் வரும்.1960களில் இரவும் பகலும் படத்தில் அறிமுகமான ஜெய்சங்கருக்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு அதிரடி படம் வந்து கொண்டு இருந்தது.

சி.ஐடி சங்கர், வைரம், வல்லவன் ஒருவன், கெட்டிக்காரன், கங்கா, யார் நீ என பல ஜேம்ஸ்பாண்ட் டைப் படங்களும் அதிரடி படங்களும் ஜெய்சங்கருக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

கிட்டத்தட்ட ஜெய்சங்கர் ஹீரோவாக தொடர்ந்து பல வருடங்களாக நடித்து வந்தார் 70களின் இறுதியில் அவர் மற்ற கதாபாத்திரங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அந்த நேரத்தில் ஜெய்சங்கருக்கு ஹீரோவாக பல வருடங்களுக்கு பின் தாறுமாறு வெற்றிக்கொடுத்த படம்தான் துணிவே துணை.

தமிழ் சினிமாவின் ஆதிகால பார்முலாப்படி காவல்துறை உயரதிகாரிகள் கூட்டம் நடக்கிறது. அதில் பொன்வயல் என்ற கிராமத்தை பற்றியும் அங்கு செல்பவர்கள் மர்மமான முறையில்  இறப்பதையும் அங்கு போலீஸ் உள்ளிட்ட வெளியூர்காரர்கள் யாருமே செல்ல முடியாமல் இருப்பதை பற்றியும் போலீஸ் உயரதிகாரிகள் கூட்டத்தில் பேசப்படுகிறது. அங்கு பேய் பிசாசு நடமாட்டம் இருப்பதை பற்றியும் கூட்டத்தில் பேசப்படுகிறது. இது எல்லாம் உண்மையா என விசாரிக்க முதலில் காவல்துறை அதிகாரி விஜயகுமார் அந்த கிராமத்துக்கு அனுப்பபடுகிறார். அவர் ரயிலில் செல்லும்போதே ஏராளமான அமானுஷ்யமான விசயங்களை சந்திக்கிறார். ரயில்வே ஸ்டேஷனில் இறங்கிய உடன் அதை விட அமானுஷ்யங்களை சந்திக்கிறார் . இறுதியில் யாருமே இல்லாத அந்த ரயில்வே ஸ்டேஷனில் மர்மமான முறையில் வந்து நிற்கும் குதிரை வண்டிக்காரனிடம் சொல்லி அந்த கிராமத்துக்கு புறப்படுகிறார். அமானுஷ்யமான அந்த குதிரை வண்டிக்காரனிடம் பேசிக்கொண்டே செல்லும்போது வெள்ளை உருவத்தில் ஒரு பெண் பேய் பாடிக்கொண்டிருப்பதை பார்த்து பயத்தில் இறந்து விடுகிறார். அவர் பேய் அடித்து இறந்து விட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் மீண்டும் காவல்துறை அதிகாரிகள் கூட்டம் நடக்கிறது அந்த கூட்டத்தில் விஜயக்குமாரின் சகோதரனாக வரும் ஜெய்சங்கரை அதே பணிக்கு மீண்டும் அனுப்புவதென  மீண்டும் அந்த பணிக்கு அனுப்புகிறார்கள். ரயிலில் செல்லும்போதே ஒரு மொட்டையன் சண்டைக்கு வருகிறார். அதன் பின் ரயில்வே ஸ்டேஷனில் ஸ்டேஷன் மாஸ்டர் பீலிசிவம் சொல்லும் பேய்க்கதைகளை எல்லாம் கேட்கிறார் அவர் சகோதரர் விஜயகுமாரை அழைத்து செல்ல வந்த அதே அமானுஷ்ய குதிரை வண்டிக்காரர் மீண்டும் வருகிறார் ஆனால் பேயிடம் இருந்து பயப்படாமல் தப்பித்து கிராமத்துக்குள் புகுந்து விடுகிறார் ஜெய்.

அப்போதுதான் டைட்டில் போட்டு படம் ஆரம்பமாகிறது. டைட்டிலுக்கு முன் வரும் விஜயகுமார் பொன்வயலுக்கு வரும் காட்சிகளும் அவர் இறந்த பின் ஜெய்சங்கர் பொன்வயலுக்கு வரும் காட்சிகளும் ரசிகர்களை சீட்டோடு கட்டிப்போட்டது என சொல்லலாம் அவ்வளவு அமானுஷ்யம் நிறைந்ததாய் அந்த காட்சிகள் இருக்கும். புதிதாய் கதை கேட்காமால் பார்ப்பவர்களுக்கு பக் பக் திக் திக் ரகமாய் இருக்கும் அந்த காட்சிகளை இன்னும் கொஞ்ச நேரம் நீட்டிருந்தால் இன்னும் நல்லா இருக்கும் என நினைக்க வைக்கும் அந்த காட்சிகள் அவ்வளவு திகிலாய் இருக்கும் என சொல்லலாம்.


அந்த பேய் வரும் ஆரம்ப காட்சிகளில் எம்.எஸ்.வி இசையில் வாணி ஜெயராம் பாடிய ஆகாயத்தில் தொட்டில் கட்டி என்ற பாடல் அந்த திகில் காட்சிக்கு வலு சேர்த்திருக்கும் வாணி ஜெயராமின் குரலில் அமானுஷ்யம் இழைந்தோடும் என சொல்லலாம்.
ஆரம்பக்கட்ட திகில் காட்சிகளை கடந்து பேயை சமாளித்து அந்த பொன்வயல் கிராமத்துக்குள் சென்றால் அது கடத்தல்காரர்களின் கோட்டை என தெரிய வரும் வெளியூர்காரர்களை உள்ளே வர விடாமல் கடத்தல் செய்பவர்கள் தான் இது போல பேய் நாடகத்தை அரங்கேற்றி ஊருக்குள் யாரையும் வர விடாமல் செய்பவர்கள் என தெரிய வரும்.

கடத்தல் காரர்களின் பாஸ் ஆக மேடம் என்ற கேரக்டரில் ராஜசுலோசனா நடித்திருந்தார். இந்த கும்பலிடம் நடித்து துப்பறிந்து கடைசியில் கடத்தல்காரர்களை சண்டையிட்டு ஜெய்சங்கர்  பிடிப்பதே துணிவே துணை படத்தின் கதை.

Advertising
Advertising

ஜேம்ஸ்பாண்ட் என ஜெய்சங்கரை சொல்வார்கள். அவர் ஜேம்ஸ்பாண்ட் என சொல்வதற்கு தகுதியான கதையாக இப்படம் இருந்தது. ஜெய்சங்கரின் ஜேம்ஸ்பாண்ட் படங்களில் இப்படம் புகழ்பெற்ற படமாய் அவருக்கு பேர் சொல்லும் படமாய் அமைந்தது என சொல்லலாம்.
இப்படத்தின் கொள்ளைக்கூட்ட தலைவியாக மிக கெத்தான ஒரு கதாபாத்திரத்தில் ராஜசுலோசனா நடித்து கலக்கி இருந்தார்.
இயக்குனர் எஸ்.பி முத்துராமன் இப்படத்தை இயக்கினார்.

பின்னாட்களில் எஸ்.பி முத்துராமன் ரஜினி, கமலை வைத்து இயக்கிய பல மசாலா படங்களின் கதைக்கும் இப்படக்கதை முன்னோடியாக இருந்தது என சொல்லலாம்.

சுருளிராஜன், செந்தாமரை, வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படம் 70ஸ் ரசிகர்களை கட்டிப்போட்டது என சொல்லலாம். படத்தில் தொட்டாலே சண்டைதான் என்ற அளவுக்கு ஆக்சன் காட்சிகள் அனல் பறக்கும். ஆக்சன் காட்சிகளில் ஜெய்சங்கர் அசத்தி இருந்தார் என சொல்லவேண்டும்.

படத்தி சண்டைப்பயிற்சியை அந்தக்கால ஸ்டண்ட் மாஸ்டர் ஆர்.எஸ் மாதவன் அமைத்திருந்தார். படத்தின் ப்ளஸ் படத்தின் சண்டைக்காட்சிகள்தான்.

இப்படத்துக்கு பஞ்சு அருணாசலம் கதை வசனம் எழுத கவியரசு கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.
1976ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி வெளியாகி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Published by
adminram

Recent Posts