Cinema History
சேதுவாக இருந்த விக்ரம் ஜெமினியாக நடிக்க என்ன காரணம்? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா?
அன்று சேதுவில் ஆரம்பித்த விக்ரமுக்கு இன்று தங்கலான் வரை வித்தியாசமான வேடம் தான் இவருக்கு விருந்து. ஆனால்…
1990ல் என் காதல் கண்மணி என்ற படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகில் களமிறங்கியவர் விக்ரம். அதன்பிறகு தந்துவிட்டேன் என்னை, காவல் கீதம், மீரா உள்பட பல படங்களில் நடித்தார். ஆனால் பெரிய அளவில் பிக்கப் இல்லை. புதிய மன்னர்கள், உல்லாசம் பரவாயில்லை ரகம்.
99ல் சேது நடித்தார். நல்ல பிக்கப். தொடர்ந்து விண்ணுக்கும் மண்ணுக்கும், தில், காசி என்று சில படங்களில் நடித்தார். ரசிகர்கள் வட்டாரம் குவிந்தது. தொடர்ந்து அவருக்கு ஏறுமுகத்தைத் தந்த படம் தான் ஜெமினி என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம் வித்தியாசமான படங்களில் நடித்துக் கொண்டு இருந்தார். அப்போது ஏவிஎம் மின் ஜெமினி படத்திலும் நடித்தார். அவர் எப்போதுமே வித்தியாசமான கதைகளத்தில் தானே நடிப்பார். அப்படி இருக்க முழுக்க முழுக்க இப்படி ஒரு மசாலா படத்தில் நடிக்க எப்படி முடிந்தது என பத்திரிகையாளர்கள் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.
அந்தப் படம் முழுக்க முழுக்க மசாலா படம்னு எனக்கும் தெரியும். இன்னும் சரியா சொல்லணும்னா அந்தக் காலக்கட்டத்தில் அப்படி ஒரு படத்தில் நடிக்கணும்கற எண்ணத்தில நான் இருந்தேன். அதன் காரணமாகத் தான் அந்தப் படத்தில் நடிக்க வேகமாக ஒத்துக் கொண்டேன். அந்தப் படத்தில் நடிக்க இன்னொரு காரணமும் இருக்கு.
ஏவிஎம் நிறுவனத்தைப் பொருத்த வரை அது ஒரு வரலாறு. அந்த வரலாற்றிலே நானும் இருக்க வேண்டும்னு நினைச்சேன். அதற்காக நான் எத்தனை நாள்கள் கனவு கண்டு இருப்பேன்னு எனக்கே தெரியாது. அப்படிப்பட்ட நிறுவனத்தில நடிக்க வாய்ப்பு கிடைச்ச போது அதை நான் தவற விடுவேனான்னு சொன்னார் விக்ரம்.

2002ல் சரண் இயக்கத்தில் விக்ரம், கிரண், கலாபவன் மணி உள்பட பலர் நடித்த படம் ஜெமினி. ஏவிஎம் தயாரிப்பில் இது ஒரு சிறந்த மசாலா படமாக வந்தது. பரத்வாஜின் இசையில் பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின.
அதிலும் நெஞ்சு துடிக்குது ஜெமினி ஜெமினி… என்ற ஓ போடு பாடல் அப்போது சின்னக்குழந்தைகளையும் ஆட்டம் போட வைத்தது. திரையிட்ட இடம் எங்கும் திருவிழா கோலம் கண்ட இந்தப் படம் மாபெரும் வசூலை அள்ளியது.
மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.
