சொத்தைத் தரமறுத்த மனைவி – கூலிப்படை அனுப்பி கொலை செய்த கணவன் !
மதுரையில் தன் பேரில் இருந்த சொத்துகளை கணவர் பேருக்கு மாற்றிக்கொடுக்க மறுத்த மனைவியை கணவரே கூலிப்படை வைத்துக் கொலை செய்துள்ளார்.
மதுரை, ரேஸ்கோர்ஸ் சாலையை சேர்ந்த தம்பதிகள் குமரகுரு மற்றும் லாவண்யா. சில தினங்களுக்கு முன்னர் லாவண்யாவை சிலர் வீடு புகுந்து கொலை செய்தனர். இது சம்மந்தமாக போலீஸார் தீவிர விசாரணையில் இறங்கியது. அப்போது லாவண்யாவின் வீடருகே இருந்த சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல் இருந்ததும் வீட்டின் கதவுகள் உடைக்கப்படாமல் எளிதாக திறக்கப்பட்டு கொலையாளிகள் வந்து சென்றதும் சந்தேகத்தைத் தூண்டியது.
இதனால் போலிஸாரின் கவனம் லாவண்யாவின் கணவர் குமரகுரு மேல் திரும்ப அவரைக் கைது செய்து விசாரணை செய்ய, மனைவியைக் கூலிப்படை அனுப்பி கொலை செய்ததை ஒத்துக்கொண்டார். பாத்திரக்கடை வைத்திருக்கும் குமரகுரு ஆடம்பர செலவுகள் செய்து சொத்தை அழிப்பதால் அவரது தந்தை பாதி சொத்தை அவரின் மனைவி லாவன்யா பேரில் எழுதி வைத்துள்ளார்.
இதனால் கோபமான குமரகுரு, லாவண்யாவை சொத்தை மாற்றி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுக்கவே தனது நண்பர்கள் மூலம் கூலிப்படையை ஏவி லாவண்யாவைக் கொலை செய்துள்ளார்.