Categories: Cinema News latest news throwback stories

5 நிமிடப் பாடல்… ஆனால் 4 மாதம் படப்பிடிப்பு… தமிழின் முதல் பிரம்மாண்ட திரைப்படத்தின் சுவாரஸ்ய பின்னணி…

தமிழ் சினிமாவில் “எந்திரன்”, “2.0”, “பொன்னியின் செல்வன்” போன்ற திரைப்படங்கள் பிரம்மாண்ட படைப்புகளாக வெளிவந்து தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. எனினும் தமிழ் சினிமாவில் வெளியான முதல் பிரம்மாண்ட படைப்பு என்றால் அது 1948 ஆம் ஆண்டு வெளிவந்த “சந்திரலேகா” என்ற திரைப்படம்தான்.

Chandralekha

“சந்திரலேகா” திரைப்படத்தில் தமிழின் முதல் கனவுக்கன்னியான டி.ஆர்.ராஜகுமாரி முன்னணி கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் இத்திரைப்படத்தில் எம்.கே.ராதா, ரஞ்சன் ஆகியோர் நடித்திருந்தனர்.

“சந்திரலேகா” திரைப்படத்தை ஜெமினி ஸ்டூடியோஸின் நிறுவனரான எஸ்.எஸ்.வாசன் தயாரித்து இயக்கியிருந்தார். அந்த காலத்தில் கிட்டத்தட்ட ரூ.30 லட்சம் செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் தமிழ், ஹிந்தி என இரண்டு மொழிகளில் வெளியானது. மேலும் இத்திரைப்படம் வெளியானபின் கோடிரூபாய் வசூல் ஆனது. இவ்வாறு பிரம்மாண்ட வெற்றி பெற்ற “சந்திரலேகா” திரைப்படத்தில் இடம்பெற்ற “முரசு நடனம்” மிகவும் பிரபலமான ஒன்று.

Chandralekha

பல எண்ணிக்கையிலான முரசுகளின் மேல் 100க்கும் மேற்பட்டோர் நடனமாடுவது போல் எடுக்கப்பட்ட இந்த நடனக் காட்சி பார்வையாளர்களை அசரவைத்தது. அப்போதுள்ள பொருளாதார நிலவரத்தில் இந்த காட்சியை படமாக்குவது முடியாத காரியம் என்றே பலரும் கூறினார்கள். ஆனால் இயக்குனரும் தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.வாசன் எதற்கும் தயங்கவில்லை. மிகவும் துணிவோடு இந்த காட்சியை எடுக்கத் தயாரானார்.

SS Vasan

பல எண்ணிக்கையிலான முரசுகளை தயாரித்து அந்தந்த இடங்களில் பொருத்துவதற்கே இரண்டே மாதங்கள் ஆனதாம். அதன் பின் படப்பிடிப்பு தொடங்கியபோது, 100 டான்சர்களை வரிசைப்படுத்தி அவர்களை ஆடவைப்பதற்கு இரண்டு மாதங்கள் ஆனதாம். 5 நிமிடங்களே வரக்கூடிய இந்த காட்சியை கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு மேல் படமாக்கியுள்ளார்கள்.

Chandralekha

எனினும் இந்த கடின உழைப்பிற்கு பலனாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற “முரசு பாடலு”க்கு ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடனக்காட்சியை இப்போது பார்த்தாலும் மிகவும் பிரம்மாண்டமாக இருக்கும்.

Published by
Arun Prasad