யாரு இவன் ரகுவரனா?.. அங்க போய் படுக்க சொல்லு.. கூல் சுரேஷை பங்கம் செய்த கவுண்டமணி..
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மறக்க முடியாத நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர்தான் கவுண்டமணி. கோவையை சேர்ந்த இவர் ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்தார். 16 வயதினிலே படம் மூலம் சினிமாவில் நுழைந்தார். அதன்பின் பல படங்களிலும் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். செந்திலையும் தன்னோடு சேர்த்துக் கொண்டு சினிமாவில் இவர் செய்த காமெடி காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது.
80களிலியே தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகராக உயர்ந்தார். திரைப்படங்களின் வெற்றிக்கு அதாவது ஒரு படம் ஓட வேண்டும் எனில் கவுண்டமணி செந்தில் காமெடி வேண்டும் என்கிற நிலையை உருவாக்கினார். பிரபு, சத்யராஜ், சரத்குமார், கார்த்திக், விஜயகாந்த் போன்ற எல்லா நடிகர்களின் படங்களின் வெற்றிக்கும் கவுண்டமணி காரணமாக இருந்திருக்கிறார். கவுண்டமணி என்றாலே நக்கல்தான்.. யார் என்ன சொன்னாலும் அதற்கு எதிர் கவுண்ட்டர் ஒன்னு கொடுப்பார். அதனால் தான் அவரின் பெயர் கவுண்ட்டர் மணி ஆனது. சினிமாவில் அது கவுண்டமணியாக மாறிவிட்டது.
90களில் ஒரு நாளைக்கு 10 லட்சம் என சம்பளம் வாங்கினார் கவுண்டமணி. இப்போது அதைத்தான் யோகி பாபு செய்து கொண்டிருக்கிறார். வயது முதிர்வு காரணமாக சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார் கவுண்டமணி. அதேநேரம் இப்போது களத்தில் உள்ள யோகி பாபு, சந்தானம் போன்ற நடிகர்கள் அவ்வப்போது கவுண்டமணியை சந்தித்து பேசி வருகிறார்கள்.
இந்நிலையில் ஊடகம் ஒன்றில் பேசிய நடிகர் சந்தானம் ‘ஒருமுறை கூல் சுரேஷை அழைத்துக் கொண்டு கவுண்டமணி சாரிடம் போனேன். அவனை அறிமுகம் செய்து ‘அண்ணே இவன் ரகுவரன் இடத்தை பிடிக்கணும்னு ஆசைப்படுறான்’ என சொன்னேன். அதற்கு அவர் ‘பெசன்ட் நகர்ல இடம் ஃப்ரீயா இருந்தா போய் படுத்துக்க சொல்லு’ என்ன பயங்கரமா கலாய்ச்சிட்டாரு’ என சொல்லி இருக்கிறார்.
