72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பாரதிராஜா உடல் நல்லடக்கம்!.. பொதுமக்கள் அஞ்சலி..
16 வயதினிலே திரைப்படம் மூலம் கோலிவுட்டில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. ஒரு திரைப்படத்தை இப்படியெல்லாம் கூட எடுக்க முடியுமா என்று ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் இயக்குனர்களுக்கும் காட்டியவர் இவர். திரைப்படங்கள் ஸ்டுடியோவில் மட்டுமே எடுக்க வந்த காலத்தில் கிராமத்திற்கு சென்று திரைப்படங்களை எடுத்தார் பாரதிராஜா.
மண்வாசனை மிக்க கிராமத்து படங்களை இயக்கினார். எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் சாதாரணமான ஒருவர் கூட திறமை இருந்தால் சினிமாவில் இயக்குனராகி வெற்றி பெற முடியும் என்கிற நம்பிக்கையை பலருக்கும் ஏற்படுத்தினார் பாரதிராஜா. கார்த்திக், ராதா, ரேகா, ராஜா, பாண்டியன், ராதிகா உள்ளிட்ட பல நடிகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
மகனின் மறைவிற்கு பின் உடல்நலம் பாதிக்கப்பட்ட பாரதிராஜா கடந்த சில மாதங்களாகவே சிகிச்சை பெற்று வந்தார் நேற்று சென்னையில் உள்ள தனது வீட்டில் அவர் காலமானார். இதையடுத்து, தேனி மாவட்டம் வத்தலகுண்டு காட்ரோடு பகுதியில் உள்ள பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் பாரதிராஜாவின் உடல் அரசு மரியாதையோடு அடக்கம் செய்யப்பட்டது.
72 துப்பாக்கி குண்டு முழங்க அரசு மரியாதை செய்யப்பட்டு அவரின் உடல் மண்ணில் புதைக்கப்பட்டது. அவரின் மகள் ஜனனி இறுதி சடங்குகளை செய்தார். இறுதி சடங்கில் வைரமுத்து, சீமான், வெற்றிமாறன், பாக்கியராஜ், அமீர், ராதிகா, நிரோஷா, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அரசு சார்பில் அமைச்சர்கள் சிடி நிர்மல்குமார், வன்னியரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.
