17,686 பேர் மீதான வழக்குகள், நடவடிக்கைகள் ரத்து! - முதல்வர் பழனிசாமி அறிவிப்பால் ஆசிரியர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு சிறப்பான ஆட்சி வழங்கி வருகிறது. வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், முதல்வர் பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதே சமயம் தமிழக வளர்ச்சிக்காககத் தொடர்ந்து பல்வேறு திட்டங்களையும் அறிமுகப்படுத்துவதோடு, செயல்வடிவமும் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் தமிழகத்தில் ஊதிய உயர்வு கேட்டு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் உட்பட 17,686 பேர் மீது தொடரப்பட்டு இருந்த 408 வழக்குகளும் ரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஊழியர்களுக்கான ஊதிய உயர்வை ஆணையிட்டவுடன் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் ஊதியக் குழுவை அமைத்து பரிசீலனை செய்து ஒரே மாதத்தில் ஊதிய உயர்வை வழங்கி அ.தி.மு.க அரசு ஆணையிட்டதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும், அ.தி.மு.க அரசு ஒருபோதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை புறம்தள்ளியது இல்லை எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.