பட்ட காலிலே படும்!.. கெட்டக் குடியே கெடும்!.. கெனிஷாவுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம்!..
பாடகி கெனிஷா மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஏற்கனவே நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி இடையேயான குடும்ப பிரச்சினையில் அவரது பெயர் பரவலாக பேசப்பட்ட நிலையில், தற்போது அவதூறு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டது. இதையடுத்து குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து தொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது. இந்த பிரிவிற்கு பாடகி கென்னிஷாவுடன் ரவி மோகனுக்கு ஏற்பட்ட நெருக்கமான நட்பே முக்கிய காரணம் என சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.
இந்த நிலையில், ஆர்த்தி ரவியை குறிவைத்து கென்னிஷா சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவிட்டு வருவதாக கூறி ஆர்த்தி ரவி நீதிமன்றத்தை அணுகினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த பதிவுகளை நீக்க உத்தரவிட்டதுடன், இனி இதுபோன்ற கருத்துக்களை வெளியிட கூடாது என்றும் தடை விதித்தது.
இதனைத் தொடர்ந்து கென்னிஷா வெளியிட்ட வீடியோவில், “நான் யாருடைய குடும்பத்தையும் கெடுக்க மாட்டேன். சென்னையை விட்டு வெளியேறப் போகிறேன்” என கண்ணீருடன் பேசியிருந்தார். மேலும் ரவி மோகனுடன் இருந்த உறவையும் முறித்துக்கொள்வதாக தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து ரவி மோகனும் தனது மௌனத்தை கலைத்து, “என் குழந்தைகளுக்காக இதுவரை அமைதியாக இருந்தேன். ஆனால் இனி பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அங்கு ஒரு சின்ன அன்பாவது இருந்திருந்தால் நான் பிரிந்து வந்திருக்க மாட்டேன். என் வாழ்க்கை இப்படி ஆனதற்கு குஷ்புதான் காரணம்” என மறைமுகமாக குற்றஞ்சாட்டியதாக கூறப்பட்டது. மேலும் விவாகரத்து கிடைக்கும் வரை புதிய படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த ஆண்டு துபாயில் நடைபெற இருந்த ஒரு இசை நிகழ்ச்சிக்கான சம்பளம் வழங்கப்படவில்லை எனக்கூறி, கெனிஷா சமூக வலைதளங்களில் ஒரு தனியார் ஊடக நிறுவனத்தை குறிவைத்து பதிவிட்டிருந்தார். அவரது தோழி அருணாவும் அந்த பதிவை ரீபோஸ்ட் செய்திருந்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனம் அவதூறு வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணைக்கு பலமுறை அழைப்பு விடுக்கப்பட்டும் கெனிஷா மற்றும் அருணா இருவரும் ஆஜராகவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் ஆஜராகாத நிலையிலேயே வழக்கு விசாரிக்கப்பட்டது.
விசாரணை முடிவில், அவதூறான தகவல்களை பரப்பியதாக நீதிமன்றம் இருவரையும் குற்றவாளிகளாக அறிவித்தது. மேலும் கெனிஷா மற்றும் அருணா ஆகியோருக்கு தலா ரூ.1,29,684 அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே ஆர்த்தி ரவி தொடர்பாக வெளியிட்ட கருத்துகளுக்காக நீதிமன்ற கண்டனத்தை சந்தித்திருந்த கெனிஷாவுக்கு, தற்போது மீண்டும் அவதூறு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
