'ஹைக்கூ' படப்பிடிப்பு நிறைவடைந்தது... ஓடிடி உரிமையால் உயர்ந்த எதிர்பார்ப்பு!
அமைதியான தலைப்பைப் போலவே ஆர்ப்பாட்டமின்றி உருவாகி வந்த 'ஹைக்கூ' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. 90 நாட்களுக்கும் மேலாக நான்கு கட்டங்களாக நடைபெற்ற படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ள நிலையில், படக்குழு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை இயக்குநர் யுவராஜ் சின்னசாமி இயக்கியுள்ளார். ஏகன் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் ஸ்ரீதேவி, பெமினா ஜார்ஜ், அதிர்ச்சி அருண், மைம் கோபி, இந்துமதி, ஜென்சன், இஸ்மத்தா பானு, 'டாக்டர்' சிவா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு யுவராஜ் சின்னசாமி எழுதி இயக்கியுள்ள நிலையில், கூடுதல் திரைக்கதையை ஹரி ஹரன் ராம் எழுதியுள்ளார். பிரியேஷ் குருசாமி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்திற்கு சக்தி பிரணேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிரேம் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து இயக்குநர் யுவராஜ் சின்னசாமி, இந்தப் படத்திற்கு முழுமையான படைப்புச் சுதந்திரம் அளித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் அர்ப்பணிப்பே படத்தை எதிர்பார்த்தபடி உருவாக்க உதவியதாகவும், 'ஹைக்கூ' ரசிகர்களுக்கு மனதை வருடும், உணர்வுபூர்வமான மற்றும் இலகுவான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிந்தவுடன் படத்தை ரசிகர்களிடம் கொண்டு செல்ல ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையில், படம் வெளியாகும் முன்பே 'ஹைக்கூ' திரைப்படம் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் பிரீமியம் தொகைக்கு கைப்பற்றியுள்ளது. தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
