சேது படத்துக்கு வந்த சிக்கல்... துணிந்த தயாரிப்பாளர்... மனம் திறந்த இயக்குனர்

 
சேது படத்துக்கு வந்த சிக்கல்... துணிந்த தயாரிப்பாளர்... மனம் திறந்த இயக்குனர்

இயக்குனர் பாலாவின் முதல் படம் சேது. விக்ரம் நடித்த இந்தப் படம் அவருக்கும் ஒரு ரீ என்ட்ரி கொடுத்தது. படத்தைப் பார்த்த ரசிகர்கள் அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பார்த்து சிலாகித்து விட்டனர். இடைவேளை வரை ஜாலியாக ச்சீயானாக வந்த விக்ரம் இடைவேளைக்குப் பிறகு யாரும் எதிர்பாராத வகையில் அப்படியே மாறிப் போயிருப்பார்.

இந்தப் படத்தில் இருந்து தான் அவருக்கு ச்சீயான் விக்ரம் என்ற பெயரே வந்தது. அதே போல இயக்குனர் பாலாவுக்கும் இந்தப் படத்திற்குப் பிறகு சேது பாலா என்றே பலரும் அழைக்கத் தொடங்கினர். முதல் படத்திற்குப் போட்ட அந்தக் கடின உழைப்பை தற்போது வரை மெய்ன்டைன் பண்ணி வருகிறார் இயக்குனர் பாலா.

சேது படத்தைப் பொருத்தவரை இதன் கிளைமாக்ஸ்சைப் பார்த்து விட்டு அத்தனை பேரின் கண்களும் குளமாகி விட்டன என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு நெகிழ்ச்சியாக காட்சிகளை எடுத்திருப்பார் இயக்குனர் பாலா. இந்தப் படத்திற்கு ஒரு சிக்கல் வந்துள்ளது. அது என்ன என்று இவ்வளவு நாள்களுக்குப் பிறகு மனம் திறந்துள்ளார் இயக்குனர் பாலா.



மனசுவிட்டு உங்ககிட்ட சொல்றேன். சேது படத்துல ரெண்டு பேரையும் சேர்த்து வச்சி கிளைமாக்ஸ மாத்திக் கொடுங்கன்னு எவ்வளவோ விநியோகஸ்தர்கள் கேட்டும் என்னோட தயாரிப்பாளர் முடியாதுன்னு சொல்லிட்டாரு. அவங்க சேர்ந்து இருந்தா இந்த அளவுக்கு அட்டென்ஷன் கிடைச்சி இருக்காது என்கிறார் இயக்குனர் பாலா.

1999ல் பாலாவின் இயக்கத்தில் வெளியான படம் சேது. விக்ரம், அபிதா, சிவகுமார், ஸ்ரீமன், மோகன் வைத்யா, பாரதி உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.கந்தசாமி மற்றும் வி.ஏ.துரை ஆகியோர் தயாரித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணியும் ரசிக்க வைத்தன. வார்த்தை தவறி, காதலென்ன, விடிய விடிய, கான கருங்குயிலே, சிக்காத சிட்டொன்று, எங்கே செல்லும், சேதுவுக்கு ஆகிய பாடல்கள் உள்ளன.

இவற்றில் எங்கே செல்லும் இந்தப் பாதை பாடலை இளையராஜா பாடியிருந்தார். சூப்பர்ஹிட் சோக மெலடியான இது தற்போது வரை ட்ரெண்ட் ஆகி உள்ளது. 2000த்தில் இந்தப் படத்திற்காக சிறந்த வட்டார மொழி தமிழ்ப்படத்துக்கான தேசிய விருது இயக்குனர் பாலாவுக்கு கிடைத்துள்ளது.

From Around the web