Categories: latest news throwback stories

டப்பிங் பேச பயந்த பாடகி… அருகில் ரஜினி, ஸ்ரீதேவி… இளையராஜா என்ன செய்தார் தெரியுமா?

80களில் இளையராஜாவின் பாடல்கள் என்றால் அவை எல்லாமே தேனமுதம்தான். இப்போது கேட்டாலும் நம் மனதை லயிக்க வைக்கும். உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்தவர்களுக்கு இந்தப் பாடல் ஒரு மாமருந்தாக அமையும். இரவு வேலை பார்ப்பவர்களுக்கும் இவரது இனிய இசை உந்துசக்தியாக விளங்கும்.

கார் பயணம் செல்பவர்களிடத்தில் தவறாமல் இளையராஜா பாடல் பேக்கேஜ் இருக்கும். இப்படி பல வழிகளில் இன்னும் இளையராஜாவின் இன்னிசை நம் வாழ்க்கையில் கலந்துள்ளது. அந்த வகையில் 80களில் வெளியான ஒரு மறக்கமுடியாத பாடல் உருவான விதம் பற்றிப் பார்ப்போம்.

மிகப்பெரிய அடையாளம்: இசைஞானி இளையராஜாவின் இசையில் பல இனிமையான பாடல்களைப் பாடியவர் ஜென்சி. எத்தனையோ பாடல்களை நான் பாடி இருந்தாலும் ஜானி படத்திலே நான் பாடிய என் வானிலே ஒரே வெண்ணிலா பாடல்தான் எனக்கு மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தது.

ஸ்ரீதேவி குரல்: அந்தப் பாடல் பதிவின்போது பாடல் தொடங்குவதற்கு முன் ஸ்ரீதேவி பேசுகிற மாதிரியான வசனம் வரும். அதையும் என்னையே பேச வைத்தார் இளையராஜா. ஒரு பக்கம் ரஜினி இருந்தார். இன்னொரு பக்கம் ஸ்ரீதேவி இருந்தார்.

தயக்கம்: அவங்க முன்னால எனக்கு ஸ்ரீதேவி குரல்ல பேசுறதுக்கு மிகுந்த தயக்கம் இருந்தது. அப்போது இளையராஜாதான் பரவாயில்லை பேசுன்னு என்னை உற்சாகப்படுத்திப் பேச வைத்தார்.

என்னுடைய குரலும், ஸ்ரீதேவி குரலும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருந்ததால ரசிகர்களால் அந்த வித்தியாசத்தை உணர முடியல என்று ஒரு பத்திரிகைப் பேட்டியிலே பதிவு செய்துள்ளார் பாடகி ஜென்சி. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

ஜானி: 1980ல் மகேந்திரன் இயக்கத்தில் ரஜினி, ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான படம் ஜானி. இந்தப் படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். பாடல்கள் எல்லாமே அற்புதம்தான். என் வானிலே, காற்றில் எந்தன் கீதம், ஆசைய காத்துல, சென்யரீடா ஐ லவ் யு, ஒரு இனிய மனது ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v