Categories: latest news throwback stories

ஏவிஎம் ஸ்டூடியோவால் விரட்டி அடிக்கப்பட்ட பிரபலம்.. பின்னாளில் எப்படி வந்து நின்னார் தெரியுமா?

கலைஞானம் என்ற பெரிய ஆளுமை: தமிழ் சினிமாவில் 200 திரைப்படங்களுக்கு மேல் திரைக்கதை எழுதி நாற்பது திரைப்படங்களுக்கு கதை எழுதி 18 திரைப்படங்களை தயாரித்தவர் கலைஞானம். இவருடைய இயற்பெயர் கே எம் பாலகிருஷ்ணன். அதோடு இயக்குனராகவும் ஒரு சில படங்களை இயக்கியிருக்கிறார். நடிகர், பாடல் ஆசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் கலைஞானம்.சினிமாவிற்கு வருவதற்கு முன் மேடை நாடகங்கள் பலவற்றை இயக்கியிருக்கிறார். அதில் நடிக்கவும் செய்திருக்கிறார். இன்று தமிழ்நாட்டுக்கு சூப்பர் ஸ்டாராக இருக்கும் ரஜினியை முதன் முதலில் ஹீரோவாக்கிய பெருமை கலைஞானத்தையே சேரும்.

ரஜினியை அறிமுகப்படுத்தியவர்: பைரவி படத்தில் ரஜினியை ஹீரோவாக அறிமுகப்படுத்தியதே கலைஞானம் தான். இவர் ஒரு பேட்டியில் தனக்கும் ஏவிஎம் நிறுவனத்திற்கும் இடையே இருக்கும் தொடர்பு பற்றி ஒரு சம்பவத்தை கூறினார். நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஒரு படத்தை தயாரிக்கலாம் என்ற எண்ணத்தில் ஒரு கதை எழுதினாராம். அந்த கதைக்கு பூஞ்சோலை என்ற பெயரையும் வைத்திருக்கிறார். சரி யாரை வைத்து இந்த படத்தை இயக்கலாம் என யோசிக்க அந்த காலத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டவர் கே எஸ் ரவிக்குமார்.

வெளியே வந்த ரவிக்குமார்: அதாவது 1993 ஆம் வருடம். அந்த நேரத்தில் இரண்டு ஹிட் படங்களை கொடுத்து அனைவரும் மத்தியிலும் நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருந்தார் ரவிக்குமார். அவரை வைத்து இந்த படத்தை இயக்கலாம் என அவரை சந்திக்க தன் காரில் புறப்பட்டு சென்றாராம் கலைஞானம். ஒரு ஸ்டூடியோவில் டப்பிங் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரவிக்குமாரை பார்க்க கலைஞானம் செல்ல இவர் வரும் செய்தி ரவி குமாருக்கு சென்று இருக்கிறது.

உடனே வேகமாக ரவிக்குமாரே வெளியே வந்து கலைஞானத்தை வரவேற்று இருக்கிறார். இந்த மாதிரி ஒரு கதை நீ தான் இயக்க வேண்டும். நாளை என் அலுவலகத்திற்கு வா. கதை பற்றி விவாதிப்போம் என சொல்ல ரவிக்குமாறும் சரி என சொல்லியிருக்கிறார். ரவிக்குமாரை சந்தித்து விட்டு அலுவலகத்திற்கு சென்ற கலைஞானத்திற்கு ஏவிஎம் நிறுவனத்தில் இருந்து ஒரு போன். சரவணன் உங்களிடம் பேச வேண்டும் என சொல்கிறார் என்று கேட்டதும் கலைஞானத்துக்கு ஆச்சரியம்.

40 வருடத்திற்கு பிறகு நடந்த அதிசயம்: ஏனெனில் 1953 ஆம் வருடம் இதே ஏவிஎம் ஸ்டுடியோவில் இருக்கும் தன்னுடைய நண்பரைப் பார்க்க கலைஞானம் வந்தபோது அங்கு இருந்த ஒரு காவலாளியால் விரட்டியடிக்கப்பட்டவர் கலைஞானம். இப்போது 1993. கிட்டத்தட்ட 40 வருடங்கள் கழித்து அதே ஏவிஎம் ஸ்டுடியோவில் இருந்து தனக்கு ஒரு போன் கால் என்று நினைத்ததும் தான் இந்த ஆச்சரியம். உடனே சரவணன் கலைஞானத்திடம் ஏதாவது கதை இருந்தால் சொல்லுங்கள். படம் பண்ணுவோம். உங்க படங்களை எல்லாம் பார்த்தேன். அற்புதமாக இருந்தது என கேட்டாராம்.

சரி என நேராக ஸ்டூடியோவிற்கே சென்று விட்டாராம் கலைஞானம் .ஒரு கதையை சொல்ல அந்த படத்தை ரவிக்குமாரை வைத்து இயக்கலாம் என்றும் கலைஞானம் சொல்லி இருக்கிறார். உடனே கே எஸ் ரவிக்குமாரும் அங்கு வர இந்த கதை பற்றி விவாதித்து இருக்கிறார்கள். அதன் பிறகு கே எஸ் ரவிக்குமார் கலைஞானத்திடம் நீங்கள் ஒரு கதை சொன்னீர்களே பூஞ்சோலை என்ற கதை. அது என்னவாயிற்று. எனக் கேட்டிருக்கிறார்.

அதற்கு கலைஞானம் இது ஏவிஎம் ஸ்டுடியோ என்கிற ஒரு பெரிய பேனர். இதில் நீ ஒரு படத்தை பண்ணினால் அது உனக்கு பெருமை. இதன் மூலம் இன்னும் நிறைய படங்கள் வாய்ப்பு உன்னை வந்து சேரும். என்னுடைய கதையை இன்னொரு முறை பார்த்துக் கொள்ளலாம். முதலில் இந்த படத்தை நீ பண்ணு என சொன்னாராம் கலைஞானம். அந்த படம் தான் சக்திவேல். செல்வா மற்றும் கனகா நடிப்பில் இளையராஜா இசையில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இருந்தாலும் ஏவிஎம் பேனர் என்பதற்காக ஓரளவு திரையரங்கில் ஓடியது என கலைஞானம் அந்த பேட்டியில் கூறினார்.

ராம் சுதன்
Published by
ராம் சுதன்