Categories: latest news throwback stories

கமலின் முதல் படத்துக்கு இவ்ளோ மவுசா? தெலுங்கு திரையுலகில் நடந்த தரமான சம்பவம்

கமல் 5 வயது முதலே சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விட்டார். இன்று வரை அதே புத்துணர்ச்சியோடு நடித்து கலக்குகிறார். கமல் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகளைக் கடந்து விட்டார். அதே நேரம் சினிமாவில் அக்கு வேறு ஆணி வேராக அனைத்து விஷயங்களையும் விரல் நுனியில் தெரிந்து வைத்துள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்த முதல் படமே சக்கை போடு போட்டது. அதில் நடந்த ஒரு சுவாரசியம் பற்றி பார்ப்போம்.

கமல்ஹாசனின் முதல் படமான களத்தூர் கண்ணம்மா வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாவூர் அம்மா என்ற பெயரில் தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டார் ஏவிஎம்.மெய்யப்பச் செட்டியார்.

அந்த படத்தை தெலுங்கில் வெளியிடும் உரிமையை வாங்கியவர் பூர்ணசந்திரராவ். இவர் பின்னாளில் பல படங்களைத் தயாரித்தார். மாவூர் அம்மா மிகப்பெரிய வெற்றிப்படமாக தெலுங்கில் அமைந்தது. ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக பல திரையரங்குகளில் ஓடியது.

அதைப் பார்த்ததும் பூரண சந்திரராவ் இவ்வளவு அருமையான படத்தைத் தெலுங்கில் எடுக்காமல் நேரடியாக மொழிமாற்றம் செய்து வெளியிட்டு விட்டீர்களே என்று ஏவி மெய்யப்பச் செட்டியாரிடம் கேட்டார். படம் சூப்பரா ஓடிக்கிட்டு இருக்கு. இப்போ வந்து சொல்றீங்களே என்று கேட்டார் மெய்யப்பச் செட்டியார்.

தொடர்ந்து நீங்க ஒரு வார்த்தை சொல்லுங்க. இப்பவே படத்தை நிறுத்திடுறேன். மீண்டும் அந்தப் படத்தை எடுத்து வெளியிடுங்கள் என்று யோசனை சொன்னார் பூரண சந்திரராவ். அவர் சொன்ன யோசனையை ஏற்றுக்கொண்டு ஜெமினிகணேசன் நடித்த பாத்திரத்தில் நாகேஸ்வரராவையும், சாவித்திரி நடித்த பாத்திரத்தில் ஜமுனாவையும் நடிக்க வைத்து தெலுங்கில் மீண்டும் எடுத்தார் மெய்யப்பச் செட்டியார். தமிழில் தந்த வெற்றியைப் போலவே தெலுங்கிலும் பெற்றுத் தந்தது அந்தப் படம்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v