Categories: Cinema News latest news throwback stories

இளையராஜா தேடிச்சென்று வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர்!.. அவர் யார் தெரியுமா?..

அன்னக்கிளி திரைப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி நாட்டுப்புற பாடலையும், மண்ணின் இசையையும் பட்டிதொட்டியெங்கும் ஒலிக்க வைத்தவர் இளையராஜா. ஹிந்தி பாடல்களை கேட்டு ரசித்துக்கொண்டிருந்த தமிழ் சினிமா ரசிகர்களை தனது இசையால் தன் பக்கம் வளைத்தவர். இவர் வந்த பிறகுதான் தமிழ் சினிமா பாடல்களின் கேசட்டுகள் அதிகமாக விற்க துவங்கியது.

ilayaraja

ஒருகட்டத்தில் இளையராஜா இல்லையேல் திரைப்படமே இல்லை என தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் கருதும் அளவுக்கு அவரின் இசை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. பல மொக்கை படங்களையும் தனது இசையால் ஓட வைத்தவர் இளையராஜா. அதேபோல், பின்னணி இசையால் திரைப்படத்தின் காட்சிகளுக்கு உயிர் ஊட்டிவிடுவார்.

எனவே, இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு முன் தினமும் காலை அவரின் வருகைக்காக தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தவம் கிடப்பார்கள். ஆனால், இளையராஜாவே தேடிச்சென்று வாய்ப்பு கேட்ட இயக்குனர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் கே.சங்கர். இவர் எம்.ஜி.ஆர், சிவாஜையை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்தவர். அடிமைப்பெண், உழைக்கும் கரங்கள், ஆலயமனி ஆகிய படங்களை இயக்கியவர். மேலும், பல ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களையும் இயக்கியுள்ளார்.

இவர் 1982ம் ஆண்டு இயக்கிய திரைப்படம்தான் தாய் மூகாம்பிகை. இளையராஜா ஒரு மூகாம்பிகை பக்தர். எனவே, அந்த படத்திற்கு தான் இசையமைக்க வேண்டும் என ஆசைப்பட்டுத்தான் கே.சங்கரிடம் நேரில் சென்று இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை எனக்கு கொடுங்கள் என கேட்டார். இளையராஜாவின் இசைக்காக பலரும் தவம் கிடக்கும்போது இவர் நம்மிடம் வந்து வாய்ப்பு கேட்கிறாரே என சங்கர் ஆச்சர்யப்பட்டார். அந்த படத்திற்கு எம்.எஸ்.விதான் இசை என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. எனவே, அவரிடம் இதுபற்றி கே.சங்கர் சொல்ல அதற்கு எம்.எஸ்.வி ‘இளையராஜா சிறந்த இசையமைப்பாளர். அவர் இந்த படத்திற்கு இசையமைக்கட்டும்’ என பெருந்தன்மையுடன் சொன்னாராம்.

மூகாம்பிகை படத்தில் ராஜா இசையமைத்த பாடல்தான் ‘ஜனனி ஜனனி’. அந்த பாடலை இளையராஜா உருகி உருகி பாடியிருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா