ஜனநாயகன் வெளியாவதில் தாமதம்: KVN புரொடக்ஷன்ஸ் எடுத்த அதிரடி முடிவு?
கோலிவுட்டின் உச்ச நட்சத்திரமும், தமிழக முதலமைச்சருமான தளபதி விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக உருவெடுத்துள்ளது ஜனநாயகன். இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம், விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பாக நடித்த அவரது கடைசி படம் என்பதால் உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதால் விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தைத் தவிர்க்க, தயாரிப்பு நிறுவனமான கே.வி.என். புரொடக்ஷன்ஸ் ஒரு முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த ஜனவரி 9-ஆம் தேதியே திரைக்கு வந்திருக்க வேண்டிய ஜனநாயகன் திரைப்படம், தணிக்கைக் குழு சான்றிதழ் சிக்கல்கள் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக ரிலீஸாகாமல் முடங்கியுள்ளது. இதனால் இத்திரைப்படத்தை பெரும் தொகை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு வட்டிச் சுமை அதிகரித்து, கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டது. இது குறித்து விநியோகஸ்தர்கள் முதல்வர் விஜயிடம் கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, விநியோகஸ்தர்களை மேலும் காக்க வைக்க விரும்பாத தயாரிப்பு நிறுவனம், அவர்களிடம் பெற்ற அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் சேர்த்து முழுமையாகத் திருப்பியளிக்க முடிவு செய்துள்ளது. இவ்வளவு பெரிய தாமதத்திற்கு மத்தியில் விநியோகஸ்தர்களின் பணத்தை எங்களிடம் வைத்திருப்பது நியாயமல்ல என கே.வி.என் நிறுவனத்தின் பிசினஸ் ஹெட் மோகன் சுப்ரித் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய்யின் அறிவுறுத்தலின் பேரிலேயே இந்த சுமூகமான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விநியோகஸ்தர்களின் பணத்தை முழுமையாக செட்டில் செய்த பிறகு, படத்தின் மீதான தணிக்கைக் குழு சிக்கல்கள் மற்றும் நீதிமன்ற வழக்குகளைத் தயாரிப்பு நிறுவனம் தனியாக எதிர்கொள்ளவுள்ளது. அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்பட்ட பிறகு, 'ஜனநாயகன்' திரைப்படத்தை எந்தவொரு விநியோகஸ்தர்களின் துணையும் இன்றி, கே.வி.என் புரொடக்ஷன்ஸ் நிறுவனமே நேரடியாக தியேட்டர்களில் சொந்தமாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்யின் கடைசிப் படம் என்பதால், இப்படம் எப்போது வெளியானாலும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
