அல்லு அர்ஜுன் இல்லை!.. முருகராக நடிக்கும் ஜூனியர் என்டிஆர்!... த்ரிவிக்ரம் ராஜமெளலி ஆவாரா?..
தெலுங்கு திரையுலகில் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த முக்கிய கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. மக்கள் நாயகன் ஜூனியர் என்டிஆர் மற்றும் முன்னணி இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இணையும் புதிய திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் முந்தைய வெற்றிப்படமான ’அரவிந்த சமேத வீரராகவா’ வெளியாகி பல ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜூனியர் என்டிஆர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்தை அறிவித்தார். வெளியிடப்பட்ட அறிவிப்பு போஸ்டர், படத்தின் கருவை பற்றிய ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. அதில் திரிசூலம், வேல் மற்றும் டி.என்.ஏ. வடிவமைப்பு இணைக்கப்பட்டிருப்பது கவனத்தை ஈர்க்கிறது. மேலும், "One Spear... One Purpose... One Divine Reckoning" என்ற ஆங்கில டேக்லைன், படம் புராணத் தாக்கத்துடன் கூடிய தெய்வீக கதைக்களத்தை மையமாகக் கொண்டிருக்கும் என்பதை உணர்த்துகிறது.
தகவல்களின் படி, இந்த திரைப்படம் புராண அம்சங்கள், உணர்ச்சிப்பூர்வமான திரைக்கதை, மாஸ் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான உலகக் கட்டமைப்புடன் உருவாகவுள்ளது. இதுவரை திரிவிக்ரம் இயக்கிய படங்களில் இருந்து மாறுபட்ட புதிய முயற்சியாக இந்த படம் அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அல்லு அர்ஜுன் முருகனாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், திரிவிக்ரம் இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் தான் முருகனாக நடிக்கப் போவது உறுதியாகி உள்ளது.

படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இணைந்துள்ளார். சமீப காலங்களில் பல பெரிய படங்களுக்கு இசையமைத்து வெற்றி கண்டுள்ள அனிருத், இந்த திரைப்படத்தின் உணர்ச்சி மற்றும் ஆக்ஷன் காட்சிகளுக்கு வலுசேர்க்கும் இசையை வழங்குவார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த பிரம்மாண்ட படத்தை ஹாரிகா & ஹாசினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் எஸ். ராதாகிருஷ்ணா (சின்ன பாபு) மற்றும் என்.டி.ஆர் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் நந்தமூரி கல்யாண் ராம் இணைந்து தயாரிக்கின்றனர். முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும், வெற்றிகரமான நடிகர்–இயக்குநர் கூட்டணியும் ஒன்றிணைவதால், இந்த திரைப்படம் இந்திய சினிமாவின் மிகப்பெரிய படைப்புகளில் ஒன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதுவரை கதாநாயகி, மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் குழு மற்றும் படப்பிடிப்பு தொடக்க தேதி குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அவை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பே ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் வைரலாகி, இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
