கேஜிஎஃப் ஹீரோவுக்கு என்ன ஆச்சு?.. மீண்டும் டாக்ஸிக் ரிலீஸை தள்ளிப்போட்டுட்டாரே?.. போச்சு!..
நடிகர் யஷ் நடித்துள்ள டாக்ஸிக் திரைப்படம் வருகிற ஜூன் 4ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், அந்த வெளியீட்டு தேதி தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக யஷ் அறிவித்துள்ளார். புதிய வெளியீட்டு தேதியை விரைவில் அறிவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கீது மோகன்தாஷ் இயக்கியுள்ள இந்த படத்தில் யஷ், தாரா சுதரியா, ருக்மணி வசந்த், கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, டோவினோ தாமஸ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். கோவாவில் நடைபெறும் போதைப்பொருள் கடத்தலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், அதிரடி கேங்ஸ்டர் திரைப்படமாகும். பல மொழிகளில் உருவாகி, பான்-இந்தியா படமாக வெளியாக உள்ளது. மேலும், இது வெறும் ஆக்ஷன் படம் மட்டுமல்லாமல், சைக்காலஜிக்கல் த்ரில்லர் அம்சங்களையும் கொண்டுள்ளது.
இந்தப் படத்தில் ஹாலிவுட் ஆக்ஷன் நிபுணர்களும் பணியாற்றியுள்ளனர். டீசர் வெளியான 24 மணி நேரத்தில் கோடிக்கணக்கான பார்வைகளை பெற்றது. அதில் இடம்பெற்ற சில காட்சிகள் குறித்து சர்ச்சைகளும் எழுந்தன. “female gaze” என்ற கருத்து தொடர்பாக ஏற்பட்ட விவாதத்திற்கும் யஷ் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை கேவிஎன் தயாரிப்பு மற்றும் மான்ஸ்டர் மைண்ட் க்ரியெஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
“நாம் உருவாக்கும் சில திரைப்படங்கள், சினிமாவை ஏன் காதலிக்கத் தொடங்கினோம் என்பதைக் மீண்டும் நினைவூட்டுகின்றன,” என்று யஷ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்திய சினிமா உலகளாவிய மேடையில் தனது குரலை வலுவாக வெளிப்படுத்தும் இந்த காலத்தில், தரத்தை உயர்த்தும் பொறுப்பு நமக்குள்ளது என்றும் அவர் வலியுறுத்தினார்.
டாக்ஸிக் திரைப்படத்தின் பணிகள் நிறைவடைந்துவிட்டன. தற்போது உலகளாவிய விநியோகம் மற்றும் புதிய விநியோகஸ்தர்களுடன் ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், வெளியீட்டு தேதியை மறுபரிசீலனை செய்ய தீர்மானித்துள்ளோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
