Categories: Cinema News latest news throwback stories

இயக்குனர் மகேந்திரனுக்கு எம்.ஜி.ஆர் கொடுத்த வேலை!.. அது மட்டும் நடந்திருந்தா!..

கடந்த 2022 ஆம் ஆண்டு மணி ரத்னம் இயக்கத்தில் வெளிவந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் முதல் பாகம் வேற லெவலில் ஹிட் அடித்தது. கிட்டத்தட்ட 400 கோடிகளுக்கும் மேல் இத்திரைப்படம் வசூல் செய்து சாதனை படைத்தது.

“பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Ponniyin Selvan

“பொன்னியின் செல்வன்” நாவலை திரைப்படமாக உருவாக்க பலரும் முனைந்தனர். அவர்களில் மிக முதன்மையானவர் எம்.ஜி.ஆர். “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை திரைப்படமாக்குவதற்கான பணிகளை மிக மும்முரமாக தொடங்கினார் எம்.ஜி.ஆர். ஆனால் அத்திரைப்படம் ஏதோ சில காரணங்களால் முடங்கிப்போனது.

இந்த நிலையில் எம்.ஜி.ஆர் உருவாக்க இருந்த “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தை குறித்து ஒரு சுவாரசியமான தகவல் வெளிவந்துள்ளது. அதாவது எம்.ஜி.ஆர், இத்திரைப்படத்திற்கு திரைக்கதை எழுத இயக்குனர் மகேந்திரனைத்தான் நியமித்திருந்தாராம்.

Ponniyin Selvan

மகேந்திரன் சினிமாவுக்குள் வருவதற்கு முன்பு தனது கல்லூரி காலங்களில் ஆங்கில திரைப்படங்களின் மேல் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தார். ஆதலால்  தமிழ் சினிமா யதார்தத்திற்கு மிக தள்ளி இருக்கிறது என்பதே அவரது பார்வையாக இருந்தது.

Mahendran

இந்த நிலையில் ஒரு முறை மகேந்திரன் படித்துக்கொண்டிருந்த காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் சிறப்பு விருந்தினராக எம்.ஜி.ஆர் ஒரு விழாவில் கலந்துகொண்டார். அப்போது மகேந்திரன் உட்பட மூன்று மாணவர்களுக்கு மேடையில் பேசுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

அப்போது மேடையில் எம்.ஜி.ஆர் படங்களை குறித்து கடுமையாக விமர்சித்துப்பேசினார். ஆனால் தன்னுடைய படங்களை மகேந்திரன் விமர்சித்ததை எம்.ஜி.ஆரே மிகவும் ரசித்து பார்த்துக்கொண்டிருந்தாராம். மகேந்திரன் பேசி முடித்தபோது பார்வையாளர்கள் பலரும் கைத்தட்டினார்கள்.

MGR

அதன் பின் மகேந்திரனை அழைத்த எம்.ஜி.ஆர் ஒரு காகிதத்தில் “நல்ல பேச்சு, நல்ல கருத்து, நகைச்சுவையுடன் கூடிய நல்ல வன்மையான உணர்ச்சியுடன் கூடிய விளக்கம். சிறந்த விமர்சகராக இருக்க தகுந்தவர். வாழ்க. அன்பன் எம்.ஜி.ராமச்சந்திரன்” என எழுதி அதனை மகேந்திரனிடம் கொடுத்தாராம்.

இதனை தொடர்ந்து மகேந்திரன் கல்லூரி படிப்பை முடித்தப்பிற்கு சென்னையில் ஒரு பத்திரிக்கையில் சினிமா விமர்சகராக பணியாற்றிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு முறை எம்.ஜி.ஆரை சந்திக்க நேர்ந்தது. மகேந்திரனை பார்த்த எம்.ஜி.ஆர் “நீங்கள் அழகப்பா பல்கலைக்கழகத்தில் படித்தவர்தானே” என அவரை ஞாபகம் வைத்துக்கொண்டு கேட்டாராம். அதன் பின் மகேந்திரன் பத்திரிக்கை துறையில் பணியாற்றிக்கொண்டிருப்பதை அவரிடமே கேட்டுத் தெரிந்துக்கொண்டார்.

MGR

உடனே எம்.ஜி.ஆர் “நீங்கள் இருக்க வேண்டிய இடம் இது இல்லை. நாளை என்னை வந்து பாருங்கள்” என மகேந்திரனிடம் கூறினாராம். அதற்கு அடுத்த நாள் மகேந்திரன் எம்.ஜி.ஆரை சென்று பார்த்திருக்கிறார். அப்போது மகேந்திரனிடம் “நான் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கப்போகிறேன். அதற்கு திரைக்கதை எழுத வேண்டும். பலரும் அந்த நாவலுக்கு திரைக்கதை எழுதி வருகிறார்கள். நீங்களும் எழுதுங்கள்” என்று கூறினாராம்.

அதன் பின் சில நாட்களிலேயே “பொன்னியின் செல்வன்” படத்திற்கான திரைக்கதையை எழுதி எம்.ஜி.ஆரிடம் கொடுத்தாராம் மகேந்திரன். அதில் சில காட்சிகளை படித்துப்பார்த்த எம்.ஜி.ஆர், மகேந்திரனை பாராட்டினாராம். எனினும் எம்.ஜி.ஆரால் “பொன்னியின் செல்வன்” படத்தை உருவாக்க முடியவில்லை.

இதையும் படிங்க: கே.பாக்யராஜ் திரைக்கதை மன்னன் ஆனது எப்படி? சொல்கிறார் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன்

Arun Prasad
Published by
Arun Prasad