கலைஞருக்காக பிறந்தநாளையே மாத்திக்கிட்டீங்க!.. இளையராஜாவுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து!..
இசை உலகின் முடிசூடா மன்னனாக திகழும் இளையராஜா இன்று தனது 83வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
1943 ஆம் ஆண்டு தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் பிறந்த இளையராஜா, 1976-ல் வெளியான அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ள அவர், இந்திய இசை வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளார்.
மேற்கத்திய செவ்வியல் இசையையும், தமிழ் நாட்டுப்புற இசையையும் இணைத்து புதிய இசை மொழியை உருவாக்கிய இளையராஜா, உலக அரங்கிலும் தமிழ் இசையின் பெருமையை உயர்த்தியவர். இந்திய அரசின் பத்ம பூஷன் மற்றும் பத்ம விபூஷன் உள்ளிட்ட உயரிய விருதுகளை பெற்றுள்ள அவர், பல தலைமுறைகளை தாண்டியும் ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கும் இசைச் சின்னமாக விளங்கி வருகிறார்.
அந்த வகையில், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்து பதிவில், "இசையால் நம்மை என்றென்றும் வசீகரிக்கும் அந்த இசை மேதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். தலைவர் கருணாநிதிக்கு மரியாதை செலுத்தும் விதமாக தனது பிறந்தநாளைக்கூட ஒரு நாள் முன்னதாக மாற்றிக்கொண்டவர் அவர். தலைவர் கருணாநிதிதான் அவருக்கு 'இசை ஞானி' என்ற பட்டத்தை வழங்கினார். அண்ணாக்கிளி முதல் சிம்பொனி வரை ராஜாவின் ஆட்சி என்றென்றும் தொடரட்டும். ராஜா எப்போதும் அரசன்!" என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ஸ்டாலின் உள்ளிட்ட அனைவரின் அன்பான வாழ்த்துகளுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். மேலும், தனது 83வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார்.
