சூர்யாவுக்கு நோ சொன்னாரா மோகன்லால்?.. காப்பான் படத்துல போட்டது போதும்னு எஸ்கேப்பா?..
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 47 திரைப்படத்தில் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவலுக்கு இயக்குநர் ஜித்து மாதவன் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
சமீப நாட்களாக சமூக வலைதளங்களில், மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் சூர்யா 47 படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில் அந்த தகவல்களை மறுத்துள்ள ஜித்து மாதவன், "படம் தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. சரியான நேரத்தில் அதிகாரப்பூர்வ அப்டேட்கள் வெளியாகும். அதுவரை வெளியாகும் தகவல்களை நம்ப வேண்டாம்" என்று தெரிவித்துள்ளார்.
கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்த காப்பான் படத்தில் ஏற்கனவே மோகன்லால் நடித்துள்ளார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. இந்நிலையில், மீண்டும் சூர்யாவுடன் இணைய மோகன்லால் விரும்பவில்லையா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்த விளக்கம் ரசிகர்கள் மத்தியில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதே நேரத்தில் படக்குழு விரைவில் முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தை சூர்யாவே தயாரித்து வருகிறார். இதற்கிடையில், வரும் ஜூலை 23-ஆம் தேதி சூர்யாவின் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா 47 படத்தின் டைட்டில் டீசர் அல்லது ஃபர்ஸ்ட் லுக் வெளியாகலாம் என்ற தகவல்கள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளன.
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சூர்யா 47 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். குறிப்பாக படத்தின் தலைப்பு, நடிகர் பட்டியல் மற்றும் வெளியீட்டு தேதி குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
