Categories: Cinema News latest news throwback stories

கலைவாணருக்கு நடந்த பாராட்டு விழாவில் எம்.ஆர்.ராதா செய்த துணிகர காரியம்… வாயை பிளந்த சக நடிகர்கள்…

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் தமிழ் சினிமாவின் பழம்பெரும் நகைச்சுவை நடிகராக திகழ்ந்தவர். இவர் அக்காலகட்டத்தில் மிகப் பெரும் கலைஞராக கொடிகட்டிப் பறந்தார். எம்.ஜி.ஆர் மிகவும் மதிப்பு வைத்திருந்த நடிகராக திகழ்ந்த என்.எஸ்.கிருஷ்ணன், ஒரு கொடை வள்ளலாகவே வாழ்ந்தார்.

யார் உதவி என்று கேட்டுவந்தாலும் எதை பற்றியும் சிந்திக்காமல் தன்னிடம் இருப்பவற்றை அள்ளிக்கொடுக்கும் குணம் கொண்டவராக இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் என்.எஸ்.கிருஷ்ணனுக்கே பொருளாதார சிக்கல் ஏற்பட்டது. அப்போது நடந்த ஒரு சம்பவத்தை குறித்து இப்போது பார்க்கலாம்.

Kalaivanar

என்.எஸ்.கிருஷ்ணனுக்கு ஒரு முறை மிகப்பெரிய பாராட்டு விழா நடைபெற்றது. அந்த பாராட்டு விழாவில் அப்போது சினிமாத்துறையில் ஜொலித்த பல நடிகர்கள் கலந்துகொண்டார்கள்.  அங்கே பலரும் கலைவாணரை கௌரவப்படுத்தும் வகையில் பல பொன்னாடைகளை அவருக்கு போர்த்தினார்கள்.

இதனை தொடர்ந்து மேடைக்கு வந்த எம்.ஆர்.ராதா, கீழே அமர்ந்திருந்தவர்களை பார்த்து, “இங்கே பல பேர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பொன்னாடை போர்த்தினீர்கள். நானும் அதை பார்த்துக்கொண்டுதான் இருந்தேன். இந்த பொன்னாடைகள் என்.எஸ்.கிருஷ்ணனை மகிழ்ச்சி படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

இன்றைய சூழ்நிலையில் அவருக்கு பொன்னாடைகள் தேவையில்லை. அவர் மிகப்பெரிய பணக்கஷ்டத்தில் இருக்கிறார். அந்த கஷ்டத்தில் இருந்து அவர் மீள வேண்டுமானால் அவர் ஒரு திரைப்படம் எடுக்கவேண்டும். அந்த படத்தில் நாம் அனைவரும் இலவசமாக நடிக்க வேண்டும். பொதுவாக நான் பணம் வாங்காமல் எந்த திரைப்படத்திலும் நடித்ததில்லை. ஆனால் நான் இப்போது சொல்கிறேன். என்.எஸ்.கிருஷ்ணன் படத்தில் நடிப்பதற்கு நான் ஒரு ரூபாய் கூட சம்பளமாக வாங்கப்போவதில்லை. அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தின் தயாரிப்பு செலவுக்காக என்னுடைய பங்காக பத்தாயிரம் ரூபாயை இந்த மேடையிலேயே அவருக்கு அளிக்கிறேன்” என்று கூறி என்.எஸ்.கிருஷ்ணனிடம் அந்த மேடையிலேயே பத்தாயிரம் ரூபாயை கொடுத்திருக்கிறார். இவ்வாறு கொடை வள்ளலான என்.எஸ்.கிருஷ்ணனுக்கே கொடை அளித்திருக்கிறார் எம்.ஆர்.ராதா.

இதையும் படிங்க: தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் தற்கொலைக்கு யார் காரணம் தெரியுமா? – சர்ச்சையை கிளப்பிய பத்திரிக்கையாளர்..!

Arun Prasad
Published by
Arun Prasad