விக்ரமனிடமே முறைத்துக்கொண்டு கிளம்பிய விஜய்!.. எஸ்.ஏ. சந்திரசேகர் புட்டு புட்டு வச்சிட்டாரு!..
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான எஸ்.ஏ.சந்திரசேகர் தனது மகனும் நடிகருமான விஜய் குறித்து பல சுவாரஸ்யமான நினைவுகளை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். இந்த பேட்டியில், விஜயின் ஒழுக்கம், வளர்ச்சி, ஆரம்பகால சவால்கள் மற்றும் ஒரு நடிகராக அவர் உருவாகிய விதம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
இயக்குனர் சித்ரா லக்ஷ்மணன், “விஜய் படப்பிடிப்பு தளங்களில் நேரத்தை மதித்து செயல்படுவது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டபோது, எஸ்.ஏ.சந்திரசேகர் தனது அனுபவங்களை பகிர்ந்தார்.
அவர் கூறுகையில், “நான் தொடர்ந்து அவருடன் ஐந்து படங்கள் பணியாற்றியிருக்கிறேன். என்னைப் பார்த்துதான் அவருக்கு அந்த பழக்கம் வந்திருக்கலாம். ஆரம்ப காலங்களில் சில தவறுகளும் நடந்திருக்கின்றன. ஒரு முறை விக்ரமன் இயக்கத்தில் விஜய் நடித்துக்கொண்டிருந்த போது, கருத்து வேறுபாடு காரணமாக யாரிடமும் சொல்லாமல் படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியேறிவிட்டார். ஆனால் ஒரு இயக்குநர் ‘பேக் அப்’ சொல்லாமல் அந்த இடத்தை விட்டு வரக்கூடாது. அந்த நேரத்தில் நான் கவுன்சிலில் வைஸ் பிரசிடெண்டாக இருந்ததால், இப்படிச் செய்தால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை அவருக்குப் புரியவைக்க விஜயை கவுன்சிலில் உட்காரவைத்தேன்,” என்றார்.
மேலும், “கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்தின் படப்பிடிப்பு விஜிபியில் நடைபெற்ற போது, இயக்குநர் ரங்கநாதன் விஜயை சாலையோரத்தில் உட்கார வைத்து மேக்கப் போட்டதாக அவர் கோபத்தில் அங்கிருந்து வெளியேறிவிட்டார். பின்னர் கோபி சார் என்னை அழைத்து கூறியதும், விஜய், கோபி மற்றும் ரங்கநாதன் ஆகிய மூவரையும் அழைத்து பேசினேன். அப்போது விஜயை அவர்களிடம் மன்னிப்பு கேட்கச் சொன்னேன். இப்படியாக ஒருவர் வெளியேறிவிட்டால், ஒரு நாள் முழு செலவு வீணாகும். தயாரிப்பாளர்களின் கஷ்டத்தையும் ஆரம்பத்திலேயே அவருக்குப் புரிய வைத்தேன். அதன் பிறகு அவர் மிகவும் கட்டுக்கோப்பாக நடந்துகொண்டார்,” என்று தெரிவித்தார்.
“விஜய் இந்த அளவிற்கு உயர்வார் என்று ஆரம்பத்திலேயே உணர்ந்தீர்களா?” என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “நான் அவரை இயக்கிய முதல் படம் தோல்வியடைந்தபோதும், அவருள் ஒரு நடிகனை பார்த்தேன். அதன்பிறகு தொடர்ந்து படங்கள் எடுத்து அவரை முன்னேற்ற முயற்சி செய்தேன். ஆனால் ரசிகன் திரைப்படம்தான் அவரை மக்கள் திரும்பிப் பார்க்க வைத்தது. அதுவரை ‘சந்திரசேகரிடம் நிறைய பணம் இருக்கிறது; அதனால் தான் மகனை வைத்து படம் எடுக்கிறார்’ என்று பலரும் கிண்டல் செய்தனர்,” என்று கூறினார்.
தொடர்ந்து அவர் உணர்ச்சிபூர்வமாக, “இப்படி தொடங்கியவர் இன்று எங்கேயோ வளர்ந்து விட்டார். இப்போது நான் அவரிடம்தான் பல விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். ஒவ்வொரு படத்திலும் அவருடன் பணியாற்றும் இயக்குநர்கள், ‘இவ்வளவு ஒழுக்கமான பிள்ளையை எப்படி வளர்த்தீர்கள்?’ என்று கேட்கும்போது, அதுவே என் வாழ்க்கைக்கு பெரிய சந்தோஷமாக இருக்கிறது,” என்றார்.
விஜயின் நடிப்பில் தமக்கு மிகவும் பிடித்த படம் குறித்து பேசும்போது, “எனக்கு மிகவும் பிடித்த படம் சச்சின். அந்த படம் வெளியான சமயத்தில் சந்திரமுகி வெளியானதால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால் அந்த படத்தில் விஜய் அசத்தலாக நடித்திருந்தார். குறிப்பாக அவரது பாடி லாங்குவேஜ் அருமையாக இருந்தது. பல இடங்களில் வடிவேலுவையே ஓவர்டேக் செய்திருந்தார். நான் மிகவும் ரசித்து பார்த்த படம் அது,” என்று பாராட்டினார்.
விஜய்க்கு எந்த நடிகை பொருத்தமாக இருப்பார் என்ற கேள்விக்கு, “அவருடன் நடித்த எல்லா நடிகைகளும் அந்த கதைக்கேற்ற வகையில் பொருந்தியுள்ளனர். ஸ்டார் வேல்யூ அடிப்படையில் பார்த்தால் நயன்தாரா பொருத்தமாக இருப்பார். ஆனால் அனைவரும் அவருடன் நன்றாகவே இணைந்துள்ளனர்,” என்றார்.
இறுதியாக விஜயின் வளர்ச்சி குறித்து அவர் கூறியதாவது: “நான் அவரை அறிமுகப்படுத்தினேன். ஆனால் இன்று குழந்தைகள் கூட அவருடைய நடனத்தை ரசிக்கிறார்கள் என்றால் அது சாதாரண விஷயம் இல்லை. அதற்காக அவர் கடுமையாக ரிஹர்சல் எடுத்திருக்க வேண்டும். உழைத்தால்தான் பலன் கிடைக்கும். இன்று அவர் இந்த அளவிற்கு வளர்ந்ததற்கு முக்கிய காரணம் இயக்குநர்கள்தான். அவர்கள் அனைவரும் சேர்ந்து விஜயை செதுக்கியுள்ளனர்,” என்று பெருமையுடன் தெரிவித்தார்.
