4 வாரம் ஒரு லேடீஸ் கூட படம் பார்க்க வரல!… விஜய் படத்திற்கு இப்படி ஒரு சோதனையா?….
Actor Vijay: கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு ‘என்னை சினிமாவில் நடிக்க வையுங்கள்’ என அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரிடம் அடம்பிடித்து, போராடி சினிமாவிற்கு வந்தவர்தான் விஜய். மற்ற யாரும் தன் மகனை வைத்து படம் எடுக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டு தனது சொந்த தயாரிப்பில் நாளைய தீர்ப்பு என்கிற படம் மூலம் விஜயை அறிமுகம் செய்து வைத்தார் எஸ்.ஏ.சி. அந்த படம் ஹிட் அடிக்கவில்லை. அடுத்து வெளிவந்த ரசிகன் படம் கவர்ச்சியான காட்சிகளால் வசூலை பெற்றாலும் அடுத்தடுத்து வந்த படங்கள் ஓடவில்லை. அது எல்லாமே எஸ்.ஏ.சந்திரசேகரின் சொந்த படங்கள்தான்.
விஜயை எப்படியாவது சினிமாவில் கரையேற்றி விட வேண்டும் என ஆசைப்பட்ட எஸ்.ஏ.சி. நிறைய தயாரிப்பாளர்களிடம், இயக்குனர்களிடமும் பேசினார். ஆனால் அவர்கள் யாரும் விஜயை வைத்து படமெடுக்க முன்வரவில்லை. எனவே அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த சரத்குமார், பார்த்திபன், சத்யராஜ், உள்ளிட்ட என பலரையும் சந்தித்து ‘என் மகனை உங்கள் படத்தில் உங்களின் தம்பியாக நடிக்க வையுங்கள்’ எனக் கேட்டார் எஸ்.ஏ.சி. அதுவும் நடக்கவில்லை.
அப்போதுதான் ஃபீல் குட் படங்களை இயக்கி வந்த விக்ரமன் தான் இயக்கும் பூவே உனக்காக படத்தில் விஜயை நடிக்க வைக்கலாம் என முடிவெடுத்தார். அதற்கு காரணம் தேவா படத்தில் விஜய் துருதுருவென நடித்திருந்ததை அவர் பார்த்தார். ஆனால், பூவே உனக்காக படத்தின் தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரிக்கு விஜயை அந்த படத்தில் நடிக்க வைக்க விருப்பமில்லை. ஆனாலும் ‘இவர்தான் சரியாக இருப்பார்’ என விக்ரமன் பேசி சம்மதிக்க வைத்தார். அப்படி உருவான பூவே உனக்காக திரைப்படம் விஜயின் கெரியரில் ஒரு முக்கிய படமாக அமைந்தது.
அந்த படத்திற்கு பின்னர்தான் விஜயை வைத்து படம் எடுக்கலாம் என்று நம்பிக்கை மற்ற தயாரிப்பாளர்களுக்கும், இயக்குனர்களுக்கும் வந்தது. அதன்பின் விஜய் உச்சம் தொட்டது தனிக்கதை. இந்த படத்தில் விக்ரமனிடம் உதவியாளராக வேலை செய்தவர் தேவயாணியின் கணவர் ராஜகுமாரன்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய அவர் ‘விஜய் சாருக்கு ஒரு கெரியரை உருவாக்கிய படம் ‘பூவே உனக்காக’. இது கமலா தியேட்டரில் முதல் நான்கு வாரம் நல்லாதான் போச்சு ஆனால் ஒரு லேடீஸ் கூட வரல. ஏன்னா அந்த படம் வர வரைக்கும் பசங்கள வச்சுதான் விஜய் சார் படம் ஓடுச்சு. ஆனா அந்த படத்துக்கு அப்புறம்தான் விஜய்க்கு ஃபேமிலி ஆடியன்ஸ் உருவானாங்க’ என பேசி இருக்கிறார்.
