பிரபாஸே சொல்லிட்டாரு!.. ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்ட படம் பாகுபலி 3 தானாம்!..
இந்திய சினிமாவில் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக திகழும் 'பாகுபலி' திரைப்படத்தின் மூன்றாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ, 'பாகுபலி 3' உருவாகுமா என்ற கேள்விக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
2017-ல் வெளியான 'பாகுபலி 2: தி கன்க்ளூஷன்', இந்திய சினிமாவின் வசூல் சாதனைகளை முறியடித்த திரைப்படமாக அமைந்தது. இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவான இப்படத்தில் பிரபாஸ், ராணா டக்குபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா பாட்டியா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணியின் இசையும், செந்தில் குமார் ஒளிப்பதிவும், சாபு சிரில் கலை இயக்கமும் படத்தின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றின.

நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள 'Baahubali: The Torch Bearer' ஆவணப்பட நிகழ்ச்சியின் புரமோ வீடியோவில், நடிகர் ராணா டக்குபதி, "பாகுபலி இன்னும் தொடரும்" என்று கூறுகிறார். அதற்கு அருகில் இருந்த நடிகர் பிரபாஸ், புன்னகையுடன் மூன்று விரல்களை காட்டி சைகை செய்கிறார். இந்த ஒரு தருணமே ரசிகர்களிடையே 'பாகுபலி 3' குறித்த எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், வீடியோவின் இறுதியில் இடம்பெறும் "The Legacy Continues" என்ற வாசகமும், இந்த பிரபல திரைப்பட உலகம் மீண்டும் விரிவடையலாம் என்ற சுட்டிக்காட்டாக ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. இருப்பினும், படக்குழு தரப்பில் இருந்து 'பாகுபலி 3' குறித்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
