Categories: Cinema News latest news throwback stories

பின்னணி இசையே இல்லாத ரஜினி படம்… “இப்படி மண்ணை வாரிப் போட்டுட்டீங்களே’… தலையில் அடித்துக்கொண்ட தயாரிப்பாளர்…

1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஷோபா, படாஃபட் ஜெயலட்சுமி, சரத்பாபு ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “முள்ளும் மலரும்”. இத்திரைப்படத்தை மகேந்திரன் இயக்கியிருந்தார். வேணு செட்டியார் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். மேலும் இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Mullum Malarum

கல்ட் சினிமா

“முள்ளும் மலரும்” திரைப்படத்தில் காளி என்ற கதாப்பாத்திரத்தில் ரஜினி நடித்திருந்தார். ரஜினி நடித்திருந்தார் என்று சொல்வதை விட காளியாகவே வாழ்ந்திருந்தார் என்றுதான் கூறவேண்டும். மேலும் இத்திரைப்படம் காலம் கடந்து பேசப்படும் கல்ட் சினிமாவாக உருவாகி இருந்தது.

Rajinikanth

இசை இல்லாமல் பார்த்த தயாரிப்பாளர்

“முள்ளும் மலரும்” திரைப்படம் உருவாக்கப்பட்ட பிறகு பின்னணி இசை கோர்க்கப்படாத நிலையில் இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் வேணு செட்டியார் பார்த்தாராம். வேணு செட்டியார் இத்திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் செய்தி மகேந்திரனின் காதுக்குச் சென்றது.

Ilaiyaraaja

“இளையராஜா இசை கோர்வை இல்லாமல் இத்திரைப்படத்தை பார்த்தால் நிச்சயமாக யாருக்கும் பிடிக்காதே” என்று நினைத்த மகேந்திரன், வேணு செட்டியார் படம் பார்த்துக்கொண்டிருந்த திரையரங்கிற்கு ஓடினார். ஆனால் மகேந்திரன் அத்திரையரங்கை அடைவதற்கு முன்பே அத்திரைப்படம் முடிந்துவிட்டது.

மண்ணை வாரிப் போட்டுட்டீங்களே

திரையரங்கில் இருந்து வெளியே வந்த வேணு செட்டியார், “உன்னைய நம்பித்தானே பணம் கொடுத்தேன். இப்படி என் தலையில் மண் அள்ளிப் போட்டுட்டியே” என கூறினாராம். அதற்கு மகேந்திரன் “இளையராஜா இசையமைத்தப் பிறகு இத்திரைப்படத்தை பாருங்கள். நிச்சயமாக நன்றாக இருக்கும்” என கூறினாராம். ஆனால் இதை எல்லாம் தயாரிப்பாளர் கேட்க தயாராக இல்லை. காரில் ஏறி சென்றுவிட்டாராம்.

Mahendran

விளம்பரம் இல்லை

“முள்ளும் மலரும்” திரைப்படம் முழுமையாக முடிவடைந்தபிறகு திரையரங்குகளில் வெளியானது. ஆனால் முதல் வாரத்தில் அவ்வளவாக வரவேற்பு இல்லை. ஆனால் ரஜினிகாந்த்தின் நண்பர்கள் “முள்ளும் மலரும்” திரைப்படத்தை பார்த்துவிட்டு “படம் நன்றாக இருக்கிறது. இன்னும் நன்றாக விளம்பரப்படுத்தினால் படம் நிச்சயம் வெற்றியடையும்” என கூறினார்களாம்.

Mullum Malarum

உடனே மகேந்திரனும் ரஜினிகாந்த்தும் வேணு செட்டியாரிடம் சென்று “நண்பர்கள் பலரும் படம் நன்றாக இருக்கிறது என கூறினார்கள். ஆதலால் நீங்கள் கொஞ்சம் மனது வைத்து இத்திரைப்படத்தை விளம்பரப்படுத்த வேண்டும்” என கூறினார்கள்.

இதனை கேட்ட வேணு செட்டியார் “நல்ல படத்துக்கு விளம்பரம் தேவையில்லை. ஓடாத படத்திற்குத்தான் விளம்பரம் தேவை” என்று கூறி விளம்பரம் செய்ய மறுத்துவிட்டாராம்.

வெற்றிப் படம்

Mullum Malarum

எனினும் நாட்கள் ஆக ஆக “முள்ளும் மலரும்” திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு எகிறியது. பல பத்திரிக்கைகள் “முள்ளும் மலரும்” திரைப்படத்தை பாராட்டி எழுதியிருந்தனர். ஆதலால் இத்திரைப்படம் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

Arun Prasad
Published by
Arun Prasad