Thalaivar173: சுந்தர்.சி போனா போகட்டும்!.. கமலிடம் ரஜினி சொன்ன அந்த வார்த்தை!.
கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ரஜினி நடிக்கவிருந்த புதிய படத்திலிருந்து இயக்குனர் சுந்தர்.சி விலகியதுதான் இப்போது திரை வட்டாரத்திலும், ரசிகர்கள் மத்தியிலும், சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இந்த காரணத்தினால்தான் சுந்தர்.சி இந்த படத்திலிருந்து விலகினார் என பலரும் பல காரணங்களையும் சொல்லி வருகிறார்கள்.
சுந்தர்.சி அதிக சம்பளம் கேட்டார், ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் படத்தை எடுக்கட்டுமா என கேட்டார், ரஜினி சொன்ன கதை சுந்தர்.சி பிடிக்கவில்லை என்றெல்லாம் பல காரணங்களை பலரும் சொன்னார்கள். இதில் சிலது மட்டுமே உண்மை என்கிறார்கள் விபரம் அடைந்தவர்கள். சுந்தர்.சி அதிக சம்பளம் கேட்கவில்லை. ஃபர்ஸ்ட் காப்பி வேண்டாம் என அவரே சொன்னதால் அவருக்கு 30 கோடி சம்பளம் கொடுக்க முடிவு செய்திருக்கிறார்கள். அது இப்போது சுந்தர்.சி வாங்குவதை விட இரண்டு மடங்கு. உண்மையில் கதைதான் பிரச்சனை என்கிறார்கள்.
ரஜினிக்காக சுந்தர்.சி உருவாக்கியது ஒரு காமெடி பேய் கதை. முதலில் கமலுக்கு இதில் உடன்பாடு இல்லை.என்றாலும் வியாபாரத்துக்கு உதவும் என ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால் ரஜினியிடம் இந்த கதையை சுந்தர்.சி சொன்னபோது அவர் ஒவ்வொரு முறையும் ஒரு மாற்றத்தை சொல்லி இருக்கிறார்.

அவர் சொன்ன எல்லாவற்றையும் மாற்றி முழு கதையும் சுந்தர்.சி அவரிடம் சொன்னபோது அதை பிடிக்கவில்லை என ரஜினி சொல்லிவிட கடுப்பாகியே இந்த படத்திலிருந்து வெளியேற வேண்டும் என சுந்தர்.சி முடிவு செய்திருக்கிறார் என்கிறார்கள். இதில் முக்கிய விஷயம் என்னவெனில் இந்த படத்திலிருந்து விலகுவதை அவர் ரஜினி, கமல் ஆகிய இருவரிடமே சொல்லவில்லையாம். அறிக்கை வெளிவந்த பின்னரே அவர்களுக்கு தெரிந்து அதிர்ச்சியாகி இருக்கிறார்கள்.
இது நடக்கும்போது கமல் சென்னையில் இல்லை. டெல்லியில் இருந்தார். இன்று மதியம்தான் அவர் சென்னைக்கு வந்தார் என்கிறார்கள். இந்த தகவல் வெளியானதும் கமலை தொடர்பு கொண்ட ரஜினி ‘சுந்தர்.சி போனால் போகட்டும். நீங்கள் வருத்தப்பட வேண்டாம்.. வேறொரு இயக்குனரை வைத்து படத்தை எடுப்போம்’ என ஆறுதலாக பேசினாராம். எனவே ரஜினிகாந்துக்காக வேறு இயக்குனரை தேடும் பணியில் கமல் விரைவில் இறங்குவார் என சொல்கிறது ராஜ்கமல் பிலிம்ஸ் வட்டாரம்.
