விரைவில் கருப்பு 2?... விஜய் இடத்தை சூர்யா நிரப்புவார்!.. ஆர்.ஜே.பாலாஜி பேட்டி..
30 வருடங்களுக்கு மேல் சினிமாவில் நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் விஜய். கோட் படத்தில் நடிக்கும் போது அடுத்து நான் நடிக்கும் ஜனநாயகன் படம்தான் எனது கடைசி திரைப்படம். அதன்பின் அரசியலுக்கு சென்று விடுவேன் என விஜய் கூறினார். இது அவர் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
ஒரு பக்கம் விஜய் அரசியலுக்கு சென்று விட்டால் அவரின் இடத்தை யார் பிடிப்பார் என்கிற விவாதமும் சமூகவலைத்தளங்களில் எழுந்தது. அப்போது சிலர் சிவகார்த்திகேயன் விஜயின் இடத்தை நிரப்புவார் என சொன்னார்கள். சிலரோ சிம்புவையும், சிலரோ சூர்யாவையும் சொன்னார்கள். ஆனால் விஜயின் ரசிகர்கள் ‘விஜயின் இடத்தை யாராலும் பிடிக்க முடியாது’ என கூறினார்கள். இந்த கருத்தை ஒரு மேடையில் சிவகார்த்திகேயனும் கூறினார். தற்போது விஜய் தமிழகத்தின் முதலமைச்சராக மாறிவிட்டார். எனவே இனி எதிர்காலத்தில் அவர் சினிமாக்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை.
இந்நிலையில்தான் விஜயின் இடத்தை சூர்யா போன்ற நடிகர்கள் நிரப்புவார்கள் என கருப்பு படத்தின் இயக்குனர் ஆர்.ஜே பாலாஜி கூறியிருக்கிறார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.ஜே பாலாஜி ‘விஜய் அரசியலுக்கு சென்றதால் சினிமாவில் வெற்றிடம் இல்லை.. சூர்யா போன்ற பெரிய நடிகர்கள் விஜயின் வெற்றிடத்தை நிரப்புவார்கள். கருப்பு திரைப்படத்தின் அடுத்த பாகம் கண்டிப்பாக வரும்.. அரசியல் மையப்படுத்திய பகுதிகளும் அதில் இருக்கும்’ எனக் கூறியிருக்கிறார்.
