Connect with us
captain

latest news

இந்த பாட்டு வேண்டாம்!.. இளையராஜாவிடமே சொன்ன இயக்குனர்!.. கேப்டன் பிரபாகரனில் நடந்த சம்பவம்!..

Captain Prabakaran: விஜயகாந்தின் நூறாவது திரைப்படம் கேப்டன் பிரபாகரன். இந்த படத்தை இயக்கியவர் ஆர்.கே.செல்வமணி. இந்த படத்திற்கு முன்பு விஜயகாந்தை வைத்து இயக்கிய புலன் விசாரணை படம் சூப்பர் ஹிட் அடித்ததால் விஜயகாந்தின் 100வது படத்தை இயக்கும் வாய்ப்பும் அவருக்கே கிடைத்தது. கேப்டன் பிரபாகரன் படத்தை விஜயகாந்தின் நெருங்கிய நண்பரும், தயாரிப்பாளருமான இப்ராஹிம் ராவுத்தர் தயாரித்திருந்தார்.

சந்தன கடத்தல் வீரப்பன் கதாபாத்திரத்தை வில்லனாக வைத்து அரசியல் பின்னணியோடு பரபர திரைக்கதை அமைத்திருந்தார் ஆர்.கே செல்வமணி. இந்த படத்தில் சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘பாசமுள்ள பாண்டியரு’ மற்றும் ‘ஆட்டமா தேரோட்டமா’ ஆகிய இரண்டு பாடல்களுமே சூப்பர் ஹிட் அடித்தது.

captain
captain

தமிழ் சினிமா வரலாற்றில் ரஜினி, கமல், பிரபு உள்ளிட்ட சில நடிகர்களுக்கு 100வது படம் கை கொடுக்கவில்லை. ஆனால் விஜயகாந்துக்கு கேப்டன் பிரபாகரன் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. விஜயகாந்தின் கெரியரிலும் இப்படம் ஒரு முக்கிய படமாக இருக்கிறது. இந்த திரைப்படம் வருகிற 22ஆம் தேதி டிஜிட்டல் பொலிவுடன் தமிழகத்தில் பல தியேட்டர்களிலும் ரீ-ரிலீஸ் செய்யப்படவிருக்கிறது.

இந்நிலையில் இப்படம் பற்றி ஊடகம் ஒன்றில் பேசிய ஆர்.கே செல்வமணி ‘இந்த படத்தின் கதையை எழுதிய போது பாடல்களே வேண்டாம் என்றுதான் முடிவெடுத்தேன். ஆனால் இரண்டு பாடல்களாவது இருக்கட்டும் என இளையராஜா சொல்லிவிட்டார். ஒரு பாடல் தேவைப்பட்டது. ஆனால் அவர் இசையமைத்து கொடுத்த பாடல் எனக்கு பிடிக்கவில்லை. எனவே அவரிடம் போனில் பேசினேன்.

rk selvamani

‘இந்த பாடல் எனக்கு வேணாம் சார்’ என நான் சொன்னதும் அவருக்கு கோபம் வந்துவிட்டது. ‘ரெக்கார்டிங் பண்ணும் போது பக்கத்தில் இருக்க மாட்டீங்க.. இப்ப வந்து அது சரியில்லை இது சரியில்லை என்று சொல்லுவீங்க. எனக்கு நிறைய ரிக்கார்டிங் வேலை எல்லாம் இருக்கு. நேரம் இல்ல.. இந்த பாட்ட எடு’ என கோபப்பட்டார். ’இல்ல சார். சார் நான் பாட்டே வேணாம்னு சொன்னேன்.. நீங்கதான் பாட்டு வச்சுக்கலாம்னு சொன்னீங்க இப்ப எனக்கே பாட்டு புடிக்கலனா நான் எப்படி அந்த பாட்ட எடுப்பேன். இதுதான் பாட்டுன்னா நான் எடுக்க மாட்டேன்’ என அவரிடம் சொன்னேன். ‘என்னய்யா இப்படி சொல்ற?.. உனக்கு என்னதான் வேணும்?’ என்ன கேட்டார்.

‘சார் நான் ஷோலே மாதிரி ஒரு படம் எடுக்கிறேன்.. அதுல வர ‘மெகபூபா’ மாதிரி ஒரு பாடல் எனக்கு வேணும்’ என சொன்னேன். ‘இப்ப வந்து சொல்லு’ என கோபமாக சொல்லிவிட்டு போனை வைத்து விட்டார்.. இதை விஜயகாந்திடம் சொன்னபோது ‘அவர் என்ன பாட்டு கொடுத்தாரோ அதை எடுங்க.. இல்லனா விட்ருங்க’ என சொல்லிவிட்டார் ஆனால் அடுத்த நாளே ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலை இளையராஜா எனக்கு கொடுத்தார்’ என பேசி இருக்கிறார்.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top